கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், இரு கட்சிகளும் தொகுதி வாரியான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாஜக முதலில் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்ளிட்ட 72 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட பட்டியல் மற்றும் 82 பேரை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட பட்டியலையும் வெளியிட்டது.
இந்த இரண்டாம் கட்ட பட்டியலில் குல்பர்கா உத்தர் தொகுதியில் இருந்து சந்திரகாந்த் பாட்டில், ஷிமோகா தொகுதியில் அசோக் நாயக், குண்ட்லூபேட் தொகுதியில் நிரஞ்சன்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியல்களிலும் பாஜக எம்.எல்.ஏ. சஷில் நமோஷியின் பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து குல்பர்கா பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சஷில் நமோஷி, ‘கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் என் பெயர், வேட்பாளர் பட்டியலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது என்னை வெகுவாக தாக்கிவிட்டது’ என பேசியவாறே கதறி அழத்தொடங்கினார்.
இதையடுத்து, அவர் அருகில் இருந்த ஆதரவாளர்கள் அவரை சமாதானம் செய்ய, பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பினார். மேலும், சுஷில் நமோஷியின் ஆதரவாளர்கள் அவருக்கு சீட்டு வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.