ADVERTISEMENT

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி? பாஜகவின் முன்னாள் எம்.பி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு! 

03:42 PM May 07, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், நோய்த்தொற்று குறைவாக உள்ளதால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT


இந்த நிலையில் "தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி ஆளுநர் கட்டுப்பாட்டில் தமிழகத்தை ஒப்படைக்க வேண்டும்" என்று பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் பாஜக எம்.பியுமான நரசிம்மன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், "தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை. கரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் தேர்தலைச் சந்திக்க அவர்கள் தயாராக இல்லை. கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதே சரியாக இருக்கும். கரோனா பாதிப்பு மனநிலை மாறி மக்கள் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்த நரசிம்மன் எழுதிய கடிதம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT