Skip to main content

கடைசி நேரத்தில் அ.தி.மு.க.-விற்கு செக் வைத்த பா.ஜ.க... மோடிக்குச் சென்ற ஊழல் ரிப்போர்ட்... இ.பி.எஸ். மீது அதிருப்தியில் இருக்கும் மத்திய அரசு!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

bjp


எடப்பாடி பழனிச்சாமி அரசின், சுமார் 2,000 கோடிக்கான டெண்டரை இறுதி செய்யும் கடைசி நேரத்தில், மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள கிராமங்களுக்கு அதிவேக இணையச் சேவையை வழங்குவதற்காக பாரத் இணையச் சேவை திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது மத்திய பாஜக அரசு. தமிழகத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த கடந்த 2019 செப்டம்பரில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடங்கிய 55,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு வினாடிக்கு ஒரு ஜி.பி. அளவு வேகத்துடன் அதிவேக இணைய வசதி கிராமங்களுக்கு கிடைக்கும்.

 

இத்திட்டத்திற்காக, தரை வழி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கு தமிழக அரசின் தமிழ் இணையச் சேவைக்கு 2,441 கோடி வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், 1,815 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை. பிறகு அந்தத் தொகை 1,950 கோடியாக உயர்த்தப்பட்டது. பாரத் இணையச் சேவை மற்றும் எடப்பாடி அரசின் இணையச் சேவைகள் நிறைவேறும்போது, தமிழகத்தில் சுமார் 12,500 கிராமங்களுக்குத் தகவல் தொடர்பு சேவை தடங்கலின்றி கிடைக்கும்.

 

இப்படிப்பட்ட சூழல்களில்தான் இந்தத் திட்டத்தின் டெண்டர் விவகாரங்களில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து தமிழக அதிகாரிகள் சிலர், பிரதமர் மோடியின் கவனத்துக்கும் ரகசியமாகக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், மத்திய ஊழல்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்துக்கும், மத்திய தகவல் தொடர்புத்துறைக்கும் இது குறித்த புகார்களை அனுப்பியது அறப்போர் இயக்கம். அதேசமயம், இந்த டெண்டர் முறைகேடுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தி.மு.க. எம்.பி.-யும் வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி.
 

dmk

 

இந்த நிலையில், பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த இத்திட்டத்தின் டெண்டரை இறுதி செய்து. ஒப்பந்தக்காரரை (காண்ட்ராக்டர் ) முடிவு செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு டெண்டரை திறக்க எடப்பாடி திட்டமிட்டிருந்த நிலையில், 'டெண்டரை திறக்கக் கூடாது' என 4 மணிக்கு தடுத்து நிறுத்தியது மத்திய அரசு. இதனால், முதல்வர் எடப்பாடி, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயக்குமார் மற்றும் அரசின் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

2,000 கோடி மதிப்பிலான திட்டத்தில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளன என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் பேசியபோது, "தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ’தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. 1,950 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் டெண்டர்களை 4 டெண்டர்களாக (ஏ.பி.சி.டி.) வகைப்படுத்தினர். தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் செயற்குழுவால் இந்த டெண்டர்களும் அதன் விதிமுறைகளும் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டன. அதன்படி, இதற்கான அறிவிப்பினை கடந்த டிசம்பர் 6ஆம்  தேதி வெளியிட்டிருந்தது ஃபைபர்நெட் கார்ப் பரேசன் .

dmk

 

குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு டெண்டரை ஒதுக்க தீர்மானித்திருந்த தமிழக அரசு, சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு இது தொடர்பாக அழுத்தம் தந்துள்ளது. அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் உயரதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தார் தலைமைச் செயலாளர். ஃபைபர்நெட் கார்ப்ப ரேசனின் இயக்குநராக ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். இதனை நாம் அம்பலப்படுத்தினோம்.

 

இதனால் இந்த டெண்டர் விவகாரங்களை கிடப்பில் வைத்த தமிழக அரசு, கரோனா வைரஸ் அதிகரிப்பில் நாடே தத்தளிக்கும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் சத்தமில்லாமல் மிகப்பெரிய மாற்றங்களை டெண்டர் விதிகளில் புகுத்தியது. குறிப்பாக, டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் அனுபவ தேவையையும், குறைந்தபட்ச டேர்ன் ஓவர் தேவையையும் 300 சதவீதம் கூடுதலாக்கப்பட்டிருந்தன. இது தவிர, பி-வகை டெண்டரில், கடந்த 3 வருடங்களில் 615 கோடி டர்ன் ஓவர் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை, 3 வருடங்களிலும் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 615 கோடி இருக்க வேண்டும் எனத் திருத்தியிருந்தனர். அதேபோல, ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதித்த அனுபவத் தேவையில், 3 ஆண்டுகளில் 204 கோடி மதிப்பிலான அனுபவம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்டிலும் 204 கோடி ரூபாய் மதிப்பிலான அனுபவம் இருக்க வேண்டும் என விதிகளை மாற்றினர். இதேபோல, 4 வகையிலான டெண்டர்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
 

admk

 

பொதுவாக, டெண்டர்களில் சிறிய வகை மாற்றங்கள் அனுமதிக்கப்படுவது இயல்பானது- ஏற்புடையது. ஆனால், தற்போது செய்திருப்பது மிகப்பெரிய திருத்தங்கள். ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே அதற்கான திட்ட வரையறைகள், டெண்டர் மதிப்பீடுகள், நிபந்தனைகள், விதிகள் எல்லாவற்றையும் முடிவுசெய்த பிறகே முறையாக அறிவிக்கின்றனர். அப்படியிருக்கையில், திட்டமும் அதற்கான டெண்டரும் அறிவிக்கப்பட்ட பிறகு இடையில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்வது எதற்காக? ஆதாயம் இல்லாமல் இப்படி மாற்றங்களையும் திருத்தங்களையும் அரசு செய்திருக்க முடியாது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியத்தின் செயற்குழுவின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்ட இந்த டெண்டரை, வாரியத்தின் சம்மதம் இல்லாமலே திருத்தம் செய்திருப்பது சட்ட விரோதம்.

 

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம், மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்குப் புகார்கள் அனுப்பியிருந்தோம். எங்கள் புகார் மீதான விசாரணையை முடிக்கும் வரை டெண்டரை இறுதிச் செய்யக்கூடாது என கடந்த மாதம் மத்திய தகவல் தொடர்புத்துறை தமிழக அரசை எச்சரித்திருந்தது. அதனை மீறும் வகையில் கடந்த 12-ஆம் தேதி டெண்டரை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்ததை அறிந்து, டெண்டரை திறக்க அரைமணி நேரத்திற்கு முன்பாக தடை விதித்தது மத்திய அரசு. கரோனா சிக்கல்களைப் பயன்படுத்தி பல்வேறு டெண்டர் முறைகேடுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் எடப்பாடி அரசில் நடந்து வருகின்றன'' என்கிறார் விரிவாகவும் அதிரடியாகவும்.

 

இந்த டெண்டர் முறைகேடுகளுக்கு எதிராக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடகோரி தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கின் விசாரணை 16-ஆம் தேதி வந்த போது, இதற்குப் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

 

இந்த நிலையில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’இந்த டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் தொழில் மற்றும் உள்வர்த்தகத்தை மேம்படுத்து வதற்கான துறைக்கு (டி.பி.ஐ.ஐ.டி.) சென்ற புகார்களின் அடிப்படையில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கும், தமிழக அரசிடமும் விளக்கம் கேட்டிருந்தது டி.பி.ஐ.ஐ.டி.! இது குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விளக்கமளித்துள்ள ஃபைபர்நெட் கார்ப்பரேசன், விதிகளுக்கு உட்பட்டே டெண்டர் விதிகள் உருவாக்கப்பட்டதாகவும் எந்தத் தவறுகளும் நடக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இதனை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் தெரிவதற்கு முன்பே டெண்டர் திறக்க தீர்மானித்ததால்தான் டி.பி.ஐ.ஐ.டி. அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது'' என்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


இதுகுறித்து தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரிடம் கேட்டபோது, "கிராமங்களுக்கு இணைய வசதி என்பது தகவல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய புரட்சி. அதனை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதற்காக அனுபவம் மற்றும் டர்ன் ஓவர் மதிப்பீடுகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதிருந்தது. மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டே நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நிறுவனத்துக்கேற்ப விதிகள் திருத்தம் செய்யப்பட்டது என்பதில் உண்மையில்லை. எந்த ஒரு டெண்டரிலிலும் ஏதேனும் ஒரு நிறுவனம்தான் தேர்வு செய்யப்படும். அப்படியானால் அந்த டெண்டர்களிலெல்லாம் தவறுகள் நடந்துள்ளது என அர்த்தமா? டெண்டர்களில் நாங்கள் வெளிப்படையாகத்தான் இருக்கிறோம். டெண்டரே முடிவு செய்யப்படாத நிலையில் ஊழல்கள் எப்படி நடக்கும்? இந்த டெண்டருக்கு மத்திய அரசு தடையெல்லாம் விதிக்கவில்லை. தி.மு.க.-வும் சில அமைப்புகளும் தங்களின் சுயநலன்களுக்காக இல்லாததை இருப்பதாக பூதாகரமாக்குகின்றன. அவர்களின் முகங்கள் நீதிமன்றத்தில் அம்பலமாகும்'' என்கிறார் அதிரடியாக.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.