ADVERTISEMENT

“இது ஏன் வலிக்கிறது..?” கொங்குநாடு குறித்து அர்ஜூன் சம்பத்..! 

03:35 PM Jul 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கொங்குநாட்டைத் தொடர்ந்து தென்நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும், தமிழ்நாட்டை மற்றொரு மேற்கு வங்காளமாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலினை மம்தாகவாகவும் மாற்ற முயற்சி நடப்பதாக அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சமூகவலைதளங்களில் விமர்சித்ததால் கைதான தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த திருமாறனை அவரது இல்லத்திற்குச் சென்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், “தமிழக நிதியமைச்சர் மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். அவர்தான் ஒன்றிய அரசு என்பதை எழுப்பியுள்ளார். தவறான வரலாற்று தகவல்களைப் பதிவுசெய்ய முயற்சிக்கிறார்.

முத்துராமலிங்க தேவர் குறித்து அவர் பேசிய தவறான பேச்சிற்கு ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் பல்வேறு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். திராவிட இயக்கத்தினர் எப்போதும் தவறான வரலாற்றுப் பதிவைக் கூறுவார்கள். நிதியமைச்சர் குறித்து பேசிய திருமாறன் மீது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்து உள்ளவர்களை மதிப்போம் என ஸ்டாலின் பொறுப்போடு பேசிவருகிறார். ஆனால், நிதியமைச்சர் பொருளாதாரம் குறித்து பேசுவதை விடுத்து ஜக்கி வாசுதேவ் குறித்து பேசுகிறார். நிதியமைச்சர் ஆலோசனையைக் கேட்டு அரசு செயல்பட்டால் தமிழக அரசுக்கு கேடு ஏற்படும்; மு.க. ஸ்டாலின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஆபாச பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை பாடநூல் கழக தலைவராக நியமித்தது திமுகவிற்கு அவமரியாதையைத்தான் ஏற்படுத்தும். சுந்தரவள்ளி, ஆ. ராசா, பிரசன்னா போன்றோர்தான் ஆபாசமாக அவதூறாகப் பேசிவருகின்றனர். கிஷோர் கே. சுவாமி மீது குண்டர் சட்டம் பதிவுசெய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கதக்கது. டி.ஜி.பி.யின் அறிக்கை வரவேற்கத்தக்கது. ஒருதலைபட்சமாக செயல்படகூடாது. திமுக அரசு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை மேற்கொள்வது திமுக ஆட்சிக்கு நல்லது அல்ல. ஒன்றிய அரசு என்பது பிரிவினை ஏற்படுத்துவது. ஜெய்ஹிந்த் கோஷம் குறித்து ஈஸ்வரன் பேசியது குறித்து ஸ்டாலின் எந்தப் பதிலும் அளிக்காததால் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. இது பயங்கரவாதத்தோடு தொடர்புடையது. நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என பேசிவருகிறோம்.

தென் நாடு என உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பது பிரிவினைவாதம் இல்லை. அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல. இது ஏன் வலிக்கிறது? அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூட எதிர்க்கிறார். கொங்கு பூகோள அடையாளம் கொங்கு பகுதி திமுகவால் புறக்கணிக்கப்படுகிறது. அதிமுக வெற்றிபெற்றதால் ஆக்சிஜனும், தடுப்பூசியும் கூட கொடுக்கவில்லை. அதனால்தான் கொங்கு பகுதியில் கரோனா அதிகமாக பரவியது. அதனால் கொங்கு என்ற தனிமாநிலம் கேட்கிறோம். இது பிரிவினைவாதம் அல்ல; வளர்ச்சி, நிர்வாக வசதிக்காகத்தான் கொங்கு நாடு கேட்கிறோம்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் உள்ள நக்சல்கள்தான் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தைக் கொளுத்த முயன்றவர்களை ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் என கூறி பிரிவினைவாதிகளுக்கு நிதி மற்றும் அரசு வேலை வழங்கியுள்ளது. அமெரிக்க ரிட்டன் நிதியமைச்சரால்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஸ்டாலினை அல்லது பிரதமர் மோடியை சந்தித்து பாண்டிச்சேரி போல கொங்கு தனி மாநிலம் கேட்பதில் என்ன தவறு?

திமுகவின் சிந்தாந்தம் தோல்வி அடைந்துவிட்டது. வெளிநாடுகளில் இருந்து திமுகவை இயக்குகிறார்கள். தமிழ்நாட்டை மற்றொரு மேற்கு வங்காளமாகவும், ஸ்டாலினை மம்தாவாகவும் மாற்ற முயற்சிக்கிறார்கள். கொள்ளிக்கட்டையை வைத்து ஸ்டாலின் தலை சொறியக் கூடாது. திமுக ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் வளரும் என்பது நடைமுறை.

அல்-உமாவை திமுகதான் வளர்த்துவிட்டது. நியுட்ரினோ திட்டம் வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கும் வைகோதான் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர். வைகோ போராட்டத்திற்கு யாரும் வரவில்லை. தேனி நியுட்ரினோவிற்கு அனுமதி அளிக்க வேண்டும். பிரதமரை சந்தித்த ஸ்டாலின் காவிரி - கோதாவரி திட்டம் குறித்து பேசாமல், ஒன்றிய அரசு என பேசுகிறார். இது தவறான அறிவுரை. அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் ஸ்டாலின் இருக்கிறார்.

அதைவிடுத்து ஈவெரா, பி.டி. ராசன் பாதைக்குச் செல்லக்கூடாது. பி.டி. ராசன் ஜாலியன் வாலபாக் படுகொலையை ஆதரித்தவர். விவசாயிகளுக்கு எதிரான ராயட் வரி பிறப்பிக்கப்பட்டது. மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற அண்ணா வழியில் செயல்பட வேண்டும். கலைஞரின் வழியில் ஸ்டாலின் செயல்பட வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்டாலின் அரசு நல்லாட்சியாக, மத்திய மாநில அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். கொங்குநாடு மற்றும் தென் தமிழ்நாடு என்பதை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆன்மீகம் மற்றும் தேசிய அரசியல் கொள்கைகளுக்கும் அவரது ஆதரவு தொடர வேண்டும் என முன்மொழிகிறோம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT