ADVERTISEMENT

அண்ணாமலை நடைபயணம்; பிரேமலதா விஜயகாந்த் புறக்கணிப்பு

11:30 AM Jul 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்தில் இருந்து ஊழலுக்கு எதிரான நடைபயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைபயணத்தை இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தேமுதிகவிற்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டரில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநிலத் துணைச் செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார். மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் தேமுதிகவினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த நிகழ்வை பிரேமலதா விஜயகாந்த் புறக்கணித்துள்ளார்.

முன்னதாக அண்ணாமலை நடத்தும் பேரணியின் தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். அண்ணாமலையின் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து இருந்தார். இருப்பினும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT