Edappadi Palaniswami rejected Annamalai's invitation

Advertisment

அதிமுக தலைமைக்கும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைமைக்கும் இடையே ஒரு சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலையும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா அல்லது இல்லையா என்பதை நாங்களே தீர்மானிப்போம் என அதிமுகவும் மோதின. பாஜகவின் டெல்லி தலைமைதான் கூட்டணி பற்றிப் பேசுவதற்கும் கட்டளையிடுவதற்கும் அதிகாரம் கொண்டது. மாநில பாஜக தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற பேச்சுக்கள் அதிமுக தரப்பில் எழுந்தன. இதன் காரணமாக அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

திமுகவிற்கு எதிராக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் பாரபட்சமின்றி வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்ததால் மோதல் மேலும் வலுப்பெற்றது. இதுமட்டுமின்றி ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அதிமுகவினர் எதிர்வினையாற்ற, 'கட்டுச்சோற்றில் கட்டிய பெருச்சாளி' என்னும் அளவிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் அண்ணாமலை வசைபாடப்பட்டார். மேலும் ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் இந்தக் கட்சிகள் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் நாளை ராமேஸ்வரத்தில் ஊழலுக்கு எதிரான நடைப் பயணத்தைத் துவங்க இருக்கிறார். 'என் மண்; என் மக்கள்' என்ற ஊழலுக்கு எதிரான பேரணியின் தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில் அண்ணாமலையின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததுடன், அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தையும் புறக்கணித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.