இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,54,065- லிருந்து 3,66,946 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903- லிருந்து 12,237 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,86,935- லிருந்து 1,94,325 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,60,384 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார். அதில், தற்போதைய தமிழக அரசு கரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் பிரதமர் தமிழக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அதோடு தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் அனைவரையும் ஒரே மாதத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன், தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மூன்றே மாதத்தில் மாற்றுவேன், இந்தியப் பொருளாதாரத்தையே ஆறு மாதத்தில் உயர்த்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், நான் பி.எஸ்.ஸி. மைக்ரோபயாலஜியும், எம்.எஸ்.ஸி. பயோடெக்னாலஜியும் படித்துள்ளேன். அதனால் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நான் என்னுடைய தாய் நாட்டைக் காப்பேன் என்றும் மீராமிதுன் கூறியுள்ளார். மீரா மிதுனின் இந்தக் கருத்துக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பைச் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.