ADVERTISEMENT

குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? - 3 கிலோமீட்டருக்கு சிசிடிவி பதிவுகளை ஆராயும் என்.ஐ.ஏ

07:20 AM Mar 02, 2024 | kalaimohan

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். இந்த சம்பவம் குறித்து உணவகத்தில் பணிபுரியும் காவலாளி கூறுகையில், “நான் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். பல வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். திடீரென பலத்த சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டது, இதனால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது" என்றார். இந்நிலையில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்''என்றார்.

இந்தநிலையில் அந்த மர்ம நபர் குறித்த விவரங்களை கண்டுபிடிக்க குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை, தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது இதுகுறித்து ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT