தமிழகம் வந்த பிரதமர் மோடி, அதன் பின் தெலங்கானா மாநிலத்திற்கு நேற்று (04-03-24) சென்றார். அங்கு, அடிலாபாத்தில் ரூ.56,000 கோடி மதிப்பிலான 30க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை ‘அண்ணா’ என அழைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர் போன்றவர். பிரதமரின் உதவியால் மட்டுமே, ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலங்களை முன்னேற்றி கொண்டு செல்லமுடியும். குஜராத் மாநிலம் போன்று தெலங்கானா முன்னேற வேண்டுமென்றால் பிரதமரின் உதவி தேவை.
காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ பிரதமர் மோடியின் ஆதரவை கோரியிருப்பதால், மத்திய அரசுடனான மோதலை விரும்பவில்லை. மாறாக சுமுகமான உறவை விரும்புகிறது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.