ADVERTISEMENT

பள்ளி அரசியல் முதல் பாராளுமன்ற அரசியல் வரை... சுஷ்மா கடந்து வந்த பாதை...

11:06 AM Aug 07, 2019 | kirubahar@nakk…

பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு காலமானார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியின் முதல் பெண் முதல்வர், இந்திரா காந்திக்கு அடுத்து இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், பாஜகவின் முதல் மக்களவை பெண் எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் சுஷ்மா ஸ்வராஜ். பாஜகவின் மூத்த தலைவர் என்பதை கடந்து மற்ற கட்சிகளின் தலைவர்களாலும், பொதுமக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி இவர்.

1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அரியானாவில் பிறந்த இவர், பள்ளியில் படிக்கும்போதே, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். பள்ளி படிப்பு முடித்த பின்னர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற சுஷ்மா, பின்னர் சட்டக் கல்வியையும் பயின்றார். பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியபோது பல அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இதன் நீட்சியாக, எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் அவரை தீவிர அரசியலை நோக்கி நகர்தின.

காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்த இவர் பாஜகவில் இணைந்தார். தனது முதல் சட்டமன்ற தேர்தலை ஹரியானாவில் சந்தித்த அவர், அதில் மாபெரும் வெற்றி பெற்றார். பின்னர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாஜ் தலைமையில் ஆட்சி அமைந்த போது, அதில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 1998 டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியமைத்த போது டெல்லியின் முதல் பெண் முதல்வராக சுஷ்மா பதவியேற்றார்.

அதன்பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2014 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்த போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அவரது இந்த பதவிக்காலத்தில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்பட்டதை கடந்து, வெளிநாடுகளில் சிக்கித்தவித்த பல அப்பாவி இந்தியர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்கான வழிவகைகளை செய்தார்.

பொதுமக்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சனை என்றால், மனு எழுதி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பார்க்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய இன்றைய சூழலில், வெறும் ஒரு ட்வீட் செய்தாலே அதனை பார்த்து விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கைகளை எடுத்தார் சுஷ்மா. பலரும் ட்வீட் மூலம் தங்கள் பிரச்சனைகளை தெரிவித்த போது அதற்கான நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்தார். இதன்மூலம் மக்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் பிடித்த அரசியல்வாதியாக மாறிப்போனார் சுஷ்மா.

இந்நிலையில், கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா, உடல்நலக்குறைவு காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். அதேபோன்று தமக்கு அமைச்சரவையில் பதவி வேண்டாம் என்றும் அறிவித்தார். சொந்த கட்சியிலேயே ஆதரவு திரட்ட பலர் கஷ்டப்படும் நிலையில், தனது சொந்த கட்சி, எதிர்கட்சி, பொதுமக்கள் என அனைவரது ஆதரவையும், அன்பையும், மதிப்பையும் சம்பாதித்த சுஷ்மாவின் இழப்பு இன்று பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT