ADVERTISEMENT

புதுச்சேரி: நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ் சங்க கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு! சமூக அமைப்புகள் கண்டனம்!!

10:53 AM Jul 05, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழ் சங்க கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்கு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'புதுவை தமிழ்ச் சங்க கட்டடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அக்கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததைச் சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புதுவை தமிழ்ச் சங்க கட்டடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 20 லட்சத்தில் கட்டப்பட்டது. தமிழ்ச் சங்கத்திற்கு இடம் சொந்தமாக இருந்தாலும், கட்டடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு (DRDA)சொந்தமானது. இதுகுறித்து அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குநர் இடையே பதிவுச் செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளது.

இக்கட்டடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் மேற்சொன்ன ஒப்பந்தத்தை மீறி கட்டடத்தை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு வசூலாகும் பணத்திற்கும் முறையாக கணக்கு வைக்காமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளை தணிக்கை செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை. பணப் பயன் பெறும் வகையிலும், நூலகம் தவிர வேறு பயன்பாட்டிற்குக் கட்டத்தைப் பயன்படுத்தவும் கூடாது என ஒப்பந்தத்தில் கூறியதை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, கட்டடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது (W.P.No. 2071 of 2020).

இந்நிலையில், கடந்த 24.06.2020 அன்று, தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு நிலுவையில் உள்ள போது, இவ்வாறு கட்டடத்தை ஒப்பந்தத்தை மீறி வேறு பயன்பாட்டிற்கு விட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். எனவே, புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு தமிழ்ச் சங்கக் கட்டடம் உள்ளது உள்ளபடியே (Status Quo) இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கூட்டறிக்கையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, தமிழர்களம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT