Skip to main content

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் - மழை வந்தால் பள்ளிக்கு விடுமுறை : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
Damaged building



நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 91 ஆயிரத்தில் மராமத்து செய்த அங்கன்வாடி கட்டிடம் இடிந்து கொட்டுவதால் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் வகுப்புகளை நடத்தி, மதிய உணவு வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பழுதான கட்டிடத்தை மாற்றக் கோரி பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் மேற் கூரையும் இடிந்து கொட்டிக் கொண்டிருப்பதால் மழை வந்தால் பள்ளிக்கு விடுமுறை விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான குழந்தைகளுடன் புளியமரத்தடியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. 

 

Damaged building


அந்த கட்டிடம் அடிக்கடி பழுதாகி உடைந்தது. அதனால் கடந்த சில ஆண்டுகளுக்குள் 2 முறை பழுது பார்க்கப்பட்டுள்ளது. கடைசியாக 2013 – 2014 ம் ஆண்டில் ரூ. 91 ஆயிரத்திற்கு சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளது. ஆனால் சமையல் கூடம், குழந்தைகள் படிக்கும் இடங்களின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி உடைந்து கொட்டியுள்ளது.

அதனால் குழந்தைகளை அந்த கட்டிடத்தில் தங்க வைத்து பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மழை காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும் மழை காலங்களில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்ததால் சுமார் 30 குழந்தைகள் வந்த நிலையில் அப்படியே பாதியாக குறைந்துவிட்டது.

 

Damaged building


அதன் பிறகு கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி அங்கன்வாடி மையத்தை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் வைத்து நடத்த தொடங்கியுள்ளனர். பல மாதங்களாக தாழ்வாரமே குழந்தைகளின் கல்விக் கூடமாக செயல்பட்டு வருகிறது. அதே வீட்டில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இரு அங்கன்வாடி மையங்களுக்கு ஒரே பணியாளர் என்பதால் உணவு சமைப்பதிலும், பாடங்கள் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டிடம் பழுதாகி விபத்து எற்படும் நிலையில் உள்ளதால் அந்தப் பகுதியில் இருந்து குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். இதனால் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் பல வருடங்களாக அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால் தான் குழந்தைகளை அனுப்புவதை நிறுத்தி வருகிறோம் என்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.

 

Damaged building


அதே போல தான் அதே மேற்பனைக்காடு வடக்கு, மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையும் உள்ளது. 2009 ம் ஆண்டு கட்டித் திறக்கப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரைகள் உடைந்து துரு ஏறிய கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கிறது. மழை பெய்ய தொடங்கினால் மேலிருந்து தண்ணீர் தொட்டுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாது. அதனால் பள்ளியை விடுமுறை விட வேண்டிய அவலநிலையும் எற்பட்டுள்ளது. 

 

இப்படித் தான் மேற்பனைக்காடு கிழக்கு அரசு பள்ளியும் உள்ளது. அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தாச்சு. சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதனிடம் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தோம். கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குவதாக சொன்னார் ஆண்டுகள் தான் ஓடிவிட்டது. கட்டிடம் தான் வரவில்லை. அதனால குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி இளைஞர்கள். 

ஆபத்தான கட்டிடங்களை உடனே மாற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். ஆனால் அதிகாரிகளும் அரசாங்கமும் விபத்து நடக்கும் வரை காத்திருந்து விபத்துகள் நடந்த பிறகே நடவடிக்கை எடுக்க துடிப்பது வழக்கமாகவே உள்ளது. கும்பகோணம் விபத்து அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நினைவிருந்தால் நல்லது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.