ADVERTISEMENT

"புதுச்சேரி மக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகவேண்டும்" - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு!

09:01 AM Aug 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த தினம் புதுச்சேரி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நல உதவிகள் வழங்கும் விழா புதுச்சேரி அரசு செய்தித்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் நேற்று (16.07.2020) நடைபெற்றது. கரோனா நோய் தொற்று காரணமாக குறைந்த அளவிலான தியாகிகளே விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், "புதுச்சேரியில் அதிகப்படியாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், துணைநிலை ஆளுநரும் மாநில மக்களின் திட்டங்களை தடுத்து வருகின்றனர். உண்மையான சுதந்திரம் பெற்றதாக புதுச்சேரி இல்லை" என கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, " புதுச்சேரி மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தற்போது அரசு தள்ளப்பட்டுள்ளது. மாநில மக்களின் உரிமைக்காக இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது, மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

இதேபோல் பிரெஞ்சு நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரெஞ்சு நாட்டு பாராளுமன்றத்தில் 1962-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடந்த கீழூரில் 1974-ஆம் ஆண்டு புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவு கூறும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து விழாவில் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் நாராயணசாமி கவுரவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT