கடந்த ஜூலை 2019ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோட்டார் வாகனச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மோட்டார் வாகனச்சட்டம் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளில், டெல்லி குர்கானைச் சேர்ந்த ஒருவர் எந்த வித ஆவணங்களும் இன்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக, அவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியை சேர்ந்தவர் தினேஷ் மதன். இவர் ஹரியானா மாநிலம் குருக்ராமில் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை காட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம், வாகனப்பதிவு புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அதோடு, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்தது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, வாகனப்பதிவு சான்று இல்லாமல் இருந்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 23,000 ரூபாயை காவல்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது காவல்துறையினர் வழங்கிய ரசீதுதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Show comments