ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இழந்த தனது எம்.பி பதவியை திரும்பப் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவருக்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே, ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்ட துக்ளக் லென் இல்லத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். அதே சமயம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில், 'எது வந்தாலும் எனது கடமை அப்படியே தொடரும். இந்தியா என்பதன் உண்மைத் தன்மையைப் பாதுகாப்போம்' என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.