ADVERTISEMENT

மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை நாளை (27.11.2019) காலை கூடுகிறது!

06:40 PM Nov 26, 2019 | santhoshb@nakk…

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22- ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.

ADVERTISEMENT

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் மனு தாக்கல் செய்தன. இதில் இன்று (26.11.2019) பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

ADVERTISEMENT


அதன்படி மஹாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 162 ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா நேற்று (25.11.2019) பேரணி நடத்திய நிலையில், நாளையே பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து வழங்கினார் பட்னாவிஸ்.

அதனை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அம்மாநில சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட காளிதாஸுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.


மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டத்தை நாளை (27.11.2019) காலை 08.00 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT