ADVERTISEMENT

மருத்துவ மாணவியின் தற்கொலை விவகாரம்; வெளியான அதிர்ச்சி தகவல்

03:04 PM Dec 08, 2023 | mathi23

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (26) எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துள்ளார். இதனையடுத்து, இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை படித்து வந்தார். மேலும், ஷஹ்னா தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார்.

ADVERTISEMENT

இதற்கிடையே, ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஷஹ்னாவுக்கு மருத்துவமனையில் இரவு பணி இருந்தது. ஆனால், அவர் பணிக்கு செல்லாமல் அறைக்குள்ளே தங்கியிருந்தார். இதனால், சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ADVERTISEMENT

அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஷஹ்னா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது செலுத்தும் மயக்க ஊசியை தானே போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, ஷஹ்னா தங்கியிருந்த அறையை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷஹ்னா தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார். திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார், ஷஹ்னாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில், ஷஹ்னாவுக்கும் அவருடன் வகுப்பில் படித்து வரும் ரூவைஸ் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இவர்களுக்குள் திருமணம் நடத்தி வைக்க இருவீட்டார்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், ரூவைஸ் மற்றும் அவரது குடும்பத்தாரும், வரதட்சணையாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், ஒரு ஆடம்பர கார் தர வேண்டும் என ஷஹ்னாவின் குடும்பத்தை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட வரதட்சணையை ஷஹ்னாவின் குடும்பத்தார் தர முடியாத காரணத்தினால் அந்த திருமணம் நின்று போனது.

இதனால் மனமுடைந்து போன ஷஹ்னா, கல்லூரிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே முடங்கியிருந்தார். இதையடுத்து, அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நேற்று (07-12-23) போலீசார், ரூவைஸை அதிரடியாக கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மருத்துவ மாணவியின் தற்கொலை தொடர்பாக மாநில சிறுபான்மை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT