ADVERTISEMENT

“ஒருவர் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பது அவரது உரிமை” - தன்பாலினத்தவர் திருமண வழக்கில் உச்ச நீதிமன்றம்

01:03 PM Oct 17, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2018 ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும் தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்த சூழலில் சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரே பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஒரே பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் 4 விதமான தீர்ப்புகளை வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி வருகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரவீந்தர பட், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் தீர்ப்பை வழங்கி வருகின்றனர். மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை வழங்கி வருகின்றனர்.

தீர்ப்பில் தலைமை நீதிபதி சந்திர சூட், “திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம். 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்படாத விஷயங்கள் இப்போது ஏற்கப்படுகிறது. நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும். சட்டத்தை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது. திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது, தேசத்தை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு சென்றுவிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.


தன்பாலின விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது. தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. திருமணமாகாத ஜோடிகள் தங்கள் உறவின் மீது அதிக ஈடுபாட்டில் இல்லை என்று கருத முடியாது. தன் பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் தரவுகள் இல்லை. திருமணமான தன்பாலின தம்பதிகள் மட்டுமே குழந்தைக்குப் பக்கபலமாகவும், ஆதரவாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. தன்பாலின தம்பதிகள் மட்டுமே ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டத்தால் கருத முடியாது. இது வழக்கத்திற்கு மாறான ஜோடிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமையும். வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும்.

பல ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம். ஒருவர் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பது அவரது உரிமை. அவர் தேர்ந்தெடுத்த இணையை அங்கீகரிக்க வேண்டும், தன்பாலினத்தவர்கள் எந்த வகையிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும். அதே சமயம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT