ADVERTISEMENT

ஐ.டி., உலோக பங்குகள் ஏற்றம்! நிதி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!! ஜூலை 14 எப்படி இருக்கும்?

06:26 AM Jul 14, 2020 | rajavel

ADVERTISEMENT


நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்களன்று (ஜூலை 13) இந்தியப் பங்குச்சந்தைகள் கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்திருக்கிறது.

ADVERTISEMENT


மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் எஸ் அண்டு பி பீ.எஸ்.இ. 36,693.69 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. கடந்த வார கடைசி நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் இது 99.36 புள்ளிகள் / 0.27 சதவீதம் ஏற்றமாகும்.


தேசிய பங்குச்சந்தையான நிப்டி, 10,892 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. இது, முந்தைய நாளைக் காட்டிலும் 34.65 புள்ளிகள் அல்லது 0.32 சதவீதம் உயர்வாகும். நிப்டி 50-இல் உள்ள நிறுவனங்களில் 33 பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. 16 பங்குகளின் மதிப்பு சரிந்தன. ஒரு பங்கு விலையில் மற்றும் எந்த மாற்றமும் நிகழவில்லை.


ஏற்ற இறக்கம்:


நிப்டியில் டெக் மஹிந்திரா (5.54%), ஹிண்டால்கோ (3.79%), ஹெச்.சி.எல். டெக் (3.74%), ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் (3.26%), ரிலையன்ஸ் (3.23%) ஆகிய பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.


பவர்கிரிட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளித்தன.


ஒட்டுமொத்த அளவில் ஐ.டி., உலோகம், நுகர்பொருள் சந்தை, எனர்ஜி துறை, ஊடகத்துறை சார்ந்த பங்குகள் ஓரளவு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தன. நிதிச்சேவைகள், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.


ஜூலை 14 எப்படி இருக்கும்?:


''பணவீக்க விகிதங்களின் சுமையைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து மேலும் ஊக்க நடவடிக்கைகளைச் சந்தைகள் எதிர்பார்க்கின்றன. இது மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வழிவகுக்கும். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பங்கு சார்ந்த நகர்வுகள் குறித்து கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்'', என்கிறார் ஜியோஜித் நிதிச்சேவைகளின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் வினோத் நாயர்.


நிப்டிக்கான முக்கிய ஆதரவு நிலை 10,741.13 புள்ளிகளாகவும் அதைத் தொடர்ந்து 10,679.57 ஆகவும் உள்ளன. குறியீடு மேலே நகர்ந்தால் கவனிக்க வேண்டிய முக்கிய எதிர்ப்பு நிலை 10,879.13 மற்றும் 10,955.57 புள்ளிகளாக இருக்கும்.


நிப்டி வங்கி:


நிப்டி வங்கிப் பங்குகளைப் பொருத்தவரை ஜூலை 13ஆம் தேதி, 1.38 சதவீதம் குறைந்து 22,089.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. முக்கியமான மைய நிலை 21,828.13 ஆகவும், அதைத் தொடர்ந்து 21,567.06 ஆகவும் உள்ளது. தலைகீழாக, முக்கிய எதிர்ப்பு நிலைகள் 22,503.83 மற்றும் 22,918.47 புள்ளிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆதாய எதிர்பார்ப்பு உள்ள பங்குகள்:


காலாண்டு முடிவுகள், நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை அடிப்படையில் சில பங்குகளுக்குச் சந்தையில் எப்போதும் வரவேற்பு இருக்கும்.


அதன்படி, பி.ஏ.எஸ்.எப். இண்டியா, ஐ.ஓ.எல். கெமிக்கல்ஸ், டாக்டர் லால் பாத்லாப்ஸ், சுவென் பார்மா அண்டு டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் ஆதாயம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது.


இன்று ரிசல்ட் அறிவிக்கும் நிறுவனங்கள்:


விப்ரோ, மைண்ட்ரீ, பாரக் வேலி சிமெண்ட்ஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், டெல்டா கார்ப், ஹிந்துஸ்தான் காப்பர், காதிம் இண்டியா, நேஷனல் பேரடாக்ஸ், ஆப்டோ சர்கியூட்ஸ், பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ப்ராஸ்ட்ரக்ஷர் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்கின்றன. இந்த முடிவுகளின் அடிப்படையில் இப்பங்குகளின் விலைகளில் ஏற்றம், இறக்கம் தென்படும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT