ADVERTISEMENT

இறந்தது பெண் அல்ல ஆண்! போலீஸுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்

04:38 PM Sep 09, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரபிரதேசத்தில், சாக்கு மூட்டையில் நீண்ட முடி மற்றும் குர்தா-பைஜாமாவுடன் சிதைந்த ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர். ஆனால், அந்த உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில் கடந்த வாரம் சாக்கு பையுடன் துர்நாற்றம் பரவியுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் சந்தேகமடைந்து பஸ்தி காவல்நிலையத்தில் இது குறித்து தகவல் கொடுத்தனர். இதனை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர், தண்ணீரில் மூழ்கியுள்ள துர்நாற்றம் பரவிய சாக்கு மூட்டையை மீட்டு திறந்து பார்த்துள்ளனர்.

அதில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், சிதைந்த நிலையிலும் ஒரு சடலத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த சடலம், ஆண் உடலா, அல்லது பெண் உடலா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்து இருந்தது. இதனையடுத்து, அந்த சடலத்தில் நீண்ட தலைமுடியையும், சிவப்பு நிற குர்தா மற்றும் வெள்ளை பைஜாமா அணிந்திருந்ததால், அந்த சடலம் பெண் உடலாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதினர். இதையடுத்து, அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த உடல் பெண் உடல் எனக் கருதி அந்த பகுதியிலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் காணாமல் போன பெண்களைப் பற்றிய தகவலை காவல்துறையினர் சேகரித்து வந்தனர். இதற்கிடையில், சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த உடல் பெண்ணுடையது அல்ல, ஆணின் உடல் என்று கண்டறிந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும், அந்த உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது கழுத்தில் கயிறு இருந்ததால், அவர் கழுத்தை யாரேனும் நெரித்திருக்கலாம் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனை அறிந்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அடையாளம் காண்பதில் இது போன்ற தவறு எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT