ADVERTISEMENT

பீகாரில் குண்டுவெடிப்பு.. ஆறு பேர் காயம்! 

11:02 AM Apr 02, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும், ராம பக்தர்கள் கடந்த 30 ஆம் தேதி ராம நவமியை கொண்டாடினார்கள். இதில் ஆந்திரா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. ஆந்திராவில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் இருந்த மேற்கூரை பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ம.பி. இந்தூரில் ஒரு கோயிலில் பழமையான கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 35 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஒருபுறம் விபத்துகள் ஏற்பட்டிருந்தபோது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. இந்தக் கலவரத்திற்கு பாஜகவும் திரிணாமூல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேபோல குஜராத், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் வன்முறை நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் பீகார் மாநிலம், சசரம் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த சம்பவம் குறித்து பீகார் காவல்துறை, ‘சட்டவிரோத வெடிபொருட்களைக் கையாளும்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து இரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இது வகுப்புவாத சம்பவம் இல்லை எனத் தெரியவந்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT