ADVERTISEMENT

20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி..! மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான அறிவிப்புகள்...

05:28 PM Feb 01, 2020 | kirubahar@nakk…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயத்திற்காக 16 அம்சங்கள் கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாண் துறை தொடர்பான மத்திய அரசின் சில முக்கிய அறிவிப்புகள்...

விவசாயத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட்டில் 16 அம்ச திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் விதமாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்களை அமைக்க, 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகள் சரியான உரம் மற்றும் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் முறை மற்றும் உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும் திட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

கிராமங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தான்யலட்சுமி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்கீழ் விதைகளை சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுவார்கள். பெண்களுக்கான திட்டங்களுக்காவே 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். விளைபொருட்களைக் கொண்டுசெல்ல தனி ரயில்கள் கிசான் ரயில் என்ற பெயரில் இயக்கப்படவுள்ளன. தேசிய, சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம், விவசாயப் பொருட்களை கொண்டுசெல்ல, கிருஷி உடான் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி நிதி கடனாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தமாக விவசாயத் துறைக்கு மட்டும் 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்வளம்:

இனிவரும் நாட்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய, நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய்கள் மூலம் நீர் வழங்க, ஜல் ஜீவன் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. இதற்காக, 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், நீர் வளத்திற்கென 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT