ADVERTISEMENT

“அதானி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி முறைகேடு செய்துள்ளது” - ராகுல்காந்தி எம்.பி.

12:14 PM Oct 18, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி இருந்தது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அண்மையில் அம்பலப்படுத்தி இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது.

அதாவது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் புகார் தெரிவித்திருந்த்து. இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்யும் நிலக்கரி நேரடியாக இந்தியாவிற்கு வந்து சேரும் நிலையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 4 நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் 130 டாலருக்கு வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது இடைத்தரகர்கள் மூலம் 169 டாலராக விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசுகையில், “பிரதமர் மோடியால் அதானி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார். அதானி மீதான முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மோடி அதானி நிறுவனத்தை பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடு நடந்துள்ளது. நிலக்கரி இறக்குமதி மூலம் அதானி நிறுவனம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளது. அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT