Skip to main content

கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

2016 தேர்தல் தமிழகத்துக்கே புதிய தேர்தல். அதிமுக தனித்து நிற்கிறேன் என்று 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதாவது காங்கிரஸ் முஸ்லிம் லீக் தவிர மற்ற எந்தக் கட்சிகளையும் திமுகவுடன் சேரவிடாமல் தனி அணி அமைத்து போட்டியிடச் செய்து, தனது கூட்டணிக் கட்சிகளையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடச்செய்தது.
 

loksabha election 2019



அந்தத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரு அணி அமைந்து மாற்றத்தை முன்னிறுத்தி போட்டியிட்டது. பாமக தனியாகவும், பாஜக தனி அணியாகவும் போட்டியிட்டன.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 87 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 141 தொகுதிகளிலும், ம.ந.கூ. 1 தொகுதியிலும், பாமக 2 தொகுதியிலும், பாஜக கூட்டணி 1 தொகுதியிலும், 2 தொகுதியில் இழுபறி நிலை என்றும் நியூஸ் 7, தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு கூறியது.

அதிமுக கூட்டணி 164  தொகுதிகளிலும் திமுக கூட்டணி 66 இடங்களிலும் வெற்றிபெறும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி கணித்திருந்தது. வேறு எந்தக் கட்சிக்கும் தொகுதி கிடைக்காது என்று கூறியிருந்தது. இரண்டு கணிப்புகளுமே பொய்யாகியது. புதிய தலைமுறை கணிப்பில் வேறு எந்தக் கூட்டணிக்கும் இடங்கள் கிடைக்காது என்பது மட்டும் சரியாகியது.

1999 தேர்தலில் பாஜக வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஓரளவு நல்ல விஷயங்கள் நடந்தன. ஆனால், கோத்ரா கலவரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. 2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் ஒளிரும் இந்தியா என்று பாஜக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்தது. கருத்துக்கணிப்புகளும் பாஜகதான் ஜெயிக்கும் என்று கூவின. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அணி வெற்றிபெற்று மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி அமைத்து.

 

 

loksabha election 2019



2009ல் நடந்த தேர்திலிலும் காங்கிரஸே மீண்டும் ஆட்சி அமைத்தது. 2014 தேர்தலுக்காக 2011 ஆம் ஆண்டிலிருந்து மோடியை புரமோட் செய்து, இல்லாத போட்டோஷாப் வேலைகளையெல்லாம் செய்து பில்டப் செய்து, 56 இன்ச் மார்பன் என்றெல்லாம் பட்டம்கட்டி சந்தித்த தேர்தலில் பாஜக கூட்டணிக்க்கு கிடைக்கும் இடங்கள் என்று வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பாஜக அதிகபட்சமாக 340 பெறும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் 148 பெறும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகியது.

அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 59 இடங்களையும், இதரக்கட்சிகள் 148 இடங்களையும் பெற்றன. அப்போதிருந்த கூட்டணியும் இப்போது இல்லை. அப்போதிருந்த பொருளாதார நிலையும் இப்போது இல்லை. மோடியால் விளைந்த கேடுகள்தான் அதிகம். இப்படி இருக்கும்போது இப்போது வரிசைகட்டி வரும் கருத்துக்கணிப்புகள் எப்படி உண்மையாக இருக்கும்?
 

 

loksabha election 2019



இந்தக் கருத்துக்கணிப்புகளின் பின்னணியில் பாஜகவின் மலிவான தந்திரம் இருக்கிறது. இந்த தந்திரத்துக்கு ஊடகங்கள் பலியாகி இருக்கின்றன. அதாவது, தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்து, அரசு அமைப்பது தொடர்பாக உடனடி முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற மலிவான நோக்கம் பாஜகவுக்கு இருக்கிறது.

அதாவது, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தால் யாருக்கு பிரதமர் பதவி? எந்தெந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் என்ன இடம் என்பதையெல்லாம் பேசி இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் அளித்துவிடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, பாஜக தனிப்பெருங்கட்சியாக வந்துவிட்டால், தன்னை அரசு அமைக்க அழைக்கும்படி குடியரசுத்தலைவரிடம் பாஜக விண்ணப்பம் கொடுக்கலாம். அவர் அழைத்துவிட்டால் எதிர்க்கட்சிகளை பேரம்பேசி வளைக்க பாஜக திட்டமிடலாம். அதற்கான வாய்ப்பை பாஜகவுக்கு கொடுக்காமல் தங்களுக்குள் உடன்பாடு எதையும் எதிர்க்கட்சிகள் எட்டிவிடக் கூடாது என்பதே இத்தகைய கருத்துக்கணிப்பு கண்றாவிகள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது