ADVERTISEMENT

யூட்யூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

03:36 PM Oct 28, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மதிக்கத்தக்க மாணவி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவரின் தாய், கண் பார்வை குறைபாடு கொண்டவர். இவரது தந்தை, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே இருக்கும் ஊரில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், அம்மாணவி வீட்டிலேயே யார் உதவியுமின்றி, பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவர் குழந்தை பெற்றெடுத்து மூன்று நாட்கள் கழித்தே அவரது பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்துள்ளது.

வீட்டிலேயே தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால் அம்மாணவிக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் வயது 17 என்பதால், மருத்துவமனை மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இவர்களின் வீட்டருகே 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்துவருகிறார். அவருடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டு, காதலாகியுள்ளது என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையிலும் இருந்துள்ளனர். அதன் மூலம் அம்மாணவி கருத்தறித்துள்ளார்.

மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இதனை பெற்றோரிடம் அவர் கூறாமல் மறைத்துள்ளார். கடந்த 20ஆம் தேதி மாணவிக்குப் பிரசவ வலி வந்துள்ளது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாணவி அவர் வீட்டின் மேல் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். பிறகு பிரசவம் குறித்து யூட்யூபில் பார்த்துள்ளார். அதனடிப்படையில் அவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்து, தொப்புள் கொடியையும் அறுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் எந்த வெளியாட்களின் உதவியையும் பெறவில்லை என்றும், பிரசவம் முழுவதையும் தனக்குத் தானே மேற்கொண்டார் என்றும் தெரியவந்துள்ளது. பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம்போல் அவர் இருந்துள்ளார். அதேசமயம் அவர் அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதையும் பெற்றோர்கள் கவனித்துள்ளனர்.

ஆனால், கரோனா காலம் என்பதால் ஆன்லைன் வகுப்புகள் இருக்குமென அவர்களும் அதனைப் பெரிதாக கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்நிலையில், அக் 22ஆம் தேதி வீட்டின் மேல் அறையிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. எப்படி வீட்டிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்கிறது என அவரது பெற்றோர்கள் மேலே சென்று பார்த்தபோதுதான், இச்சம்பவம் தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தங்கள் மகளிடம் விசாரித்தபோது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதும் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அவரது பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் மாணவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், 17 வயது மாணவியைத் தாயாக்கிய அவ்வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT