இதனைத் தொடர்ந்து, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடைபெறும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் நாளான 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாளான 16ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.