Skip to main content

ஹாட்ரிக் அடித்த பிரபாகரன்... பாலமேடு  ஜல்லிக்கட்டு நிறைவு! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

Prabhakaran scores a hat trick ... Palamedu Jallikkattu completed!

 

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்தது.

 

 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தமாக ஏழு சுற்றுக்கள் நடைபெற்றது. 7 சுற்றின் முடிவில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மதுரை மாவட்டம் பொதும்பை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழரசன், ராமச்சந்திரன் என்ற இருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

Prabhakaran scores a hat trick ... Palamedu Jallikkattu completed!

 

 

போட்டியில் வெற்றிபெற்ற பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''இதுவரை எத்தனை மாடுகள் பிடித்துள்ளேன் என்று அவர்கள் சொல்லவில்லை. என் கணக்குப்படி நான் இருபத்தொரு மாடுகளை பிடித்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மூன்றாவது முறையாக நான் முதல் இடம் வந்தது மகிழ்ச்சி. மாடுபிடி வீரர்களுக்கு சவாலாக இருந்தது. போன வருஷம் ஒவ்வொரு ஊர்லயும் அடைக்கிற காளைகளை அப்படியே கொண்டு வருவாங்க. அவனியாபுரத்தில் நடந்தபின் அடுத்தது பாலமேட்டில் நடக்கும். அப்பொழுது மாடு சோர்வடைந்து இருக்கும். ஆனால் இந்த வருடம் ஆன்லைன் மூலமாக செய்ததால் ஆளாளுக்கு பிரித்துக் கொண்டார்கள். எனவே மாடுகள் எல்லாம் ஃபுல் எனர்ஜியில்தான் இருந்தது. எனவே மாடுகளை பிடிப்பது சிரமமாக இருந்தது.

 

 

ஆன்லைன் பதிவு ஈசியாக இல்லை. ரொம்ப கடுமையாக இருந்தது. நான் டிரைவராக வேலை செஞ்சிட்டு இருக்கேன். நான் போன வருஷமே சொன்னேன் அரசு வேலை கொடுத்தா நல்லா இருக்கும்னு. இந்த தடவை அரசு வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். முதல்வர் ஒரு முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுவேலை கொடுத்தால் நல்லா இருக்கும். இந்த தடவை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் பார்ப்போம். மாடுபிடி வீரர்களை அங்கீகரிக்க வேண்டுமென நினைக்கிறேன். எல்லோரும் நினைக்கிறார்கள் மாடுகளை பிடிப்பது காலி பசங்கன்னு. இது காலி பசங்க பிடிக்கிறது கிடையாது. இதுக்குள்ள போனா நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதற்காகதான் இந்த அரசு வேலையை கேட்கிறோம். தமிழர் வீரத்திற்கு  மதிப்பு கொடுக்க வேண்டும். கொடுத்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.