சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, ஜார்க்கண்ட் மாநில அரசு 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று (06-03-24) சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார் பேசியதாவது, “நம் சமூகத்தில் விதவை பெண்கள், கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதில்லை. கணவனை இழந்த விதவைகள் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விதவை பெண்கள், தங்கள் திருமணப் பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணம் செய்து கொள்ளும் எந்த விதவை பெண்களும், திருமணமான ஒரு வருடத்திற்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.