ADVERTISEMENT

சட்டப்பேரவைக்கு திமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை!

10:05 AM May 29, 2018 | Anonymous (not verified)


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து, நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு வாயில் கதவில் தமிழக அரசின் அரசாணையும் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கு, சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. இதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் பேரவை நிகழ்வுகளை ஒத்திவைத்து ஸ்டெர்லைட் பற்றி இன்று முழுவதும் விவாதிக்க கோரி திமுக தீர்மானத்தில் கோரியுள்ளது.

ADVERTISEMENT

படங்கள்: ஸ்டாலின்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT