காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கடந்த 22 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுடன், முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்துவது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் அப்போது நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் நேற்று தொலைபேசியில் விவாதித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மு.க.ஸ்டாலின் சந்தித்தார். காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க, கர்நாடக அரசு வரும் 7 ஆம் தேதி அனைத்துக் கட்சியினருடன் ஆலோசிக்க உள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments