Skip to main content

அ.தி.மு.க.வினரை விரட்ட துவங்கிய எடப்பாடி...இது உண்மையா என சீறியிருக்கிறார் அமித்ஷா!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

வேலூரில் இரட்டை இலையில் போட்டியிடும் ஏ.சி.எஸ்.சை ஜெயிக்க வைப்பதில் முதல்வர் எடப் பாடியும் துணைமுதல்வர் பன்னீரும் திடீர் வேகம் காட்டுகிறார்கள். பன்னீரின் டெல்லி பயணத்திற்குப் பிறகே எடப்பாடியிடம் இந்த வேகம் அதிகரித் திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட விழாவில் கலந்து கொண்டதற்குப் பிறகு, அவரையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்டு தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் ஓ.பி.எஸ். தமிழக அரசில் தங்களின் முகமாக ஓ.பி.எஸ்.சை பா.ஜ.க. வைத்திருந்தாலும், ஓ.பி.எஸ்.சின் விருப்பம் நிறைவேறாமலே இருந்தது.

 

admk



ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அப்படியே பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டவர்களையும் சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். எடப்பாடியின் டெல்லி விசிட்டில் திட்டமிட்டே ஓ.பி.எஸ். தவிர்க்கப்பட்டார் என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்தது. இதனால், அந்த சமயத்திலேயே தனது விருப்பத்தை மீண்டும் அமித்ஷாவிடம் ஓ.பி.எஸ். நினைவுபடுத்தியபோது, "நேரம் வரும்போது நானே அழைக்கிறேன்' என அமித்ஷா சொல்லியதால் டெல்லிக்கு செல்வது குறித்த முயற்சியை கைவிட்டிருந்தார் ஓ.பி.எஸ். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 20-ந்தேதி முடிவடைந்த நிலையில் அன்று இரவு ஓ.பி.எஸ்.ஸை தொடர்புகொண்ட அமித்ஷா, டெல்லிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். மகிழ்ச்சி பொங்க, என்னென்ன பேச வேண்டும் என்பதை பட்டியலிட்டுக்கொண்டார் ஓ.பி.எஸ். அத்துடன் அரசியல் யூகங்களுக்கு இடம் கொடுக்காதபடி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கேற்ப நிதித்துறை செயலர் கிருஷ்ணனையும் அழைத்துச் சென்ற பன்னீர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமித்ஷாவின் அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி அவரை சந்தித்தார்.

 

admk



இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை தன்னுடன் வைத்துக் கொண்ட அமித்ஷா, கிட்டத்தட்ட 40 நிமிடம் ஓ.பி.எஸ்.சுடன் விவாதித்திருக்கிறார். அமித்ஷா அழைத்திருப்பதை எடப்பாடியிடம் சொல்லி விட்டு சென்னையிலிருந்து டெல்லிக்கு ஓ.பி.எஸ். கிளம்பியிருந்தாலும், அவரிடம் நீண்ட நேரம் அமித்ஷா விவாதிப்பதையறிந்து டெல்லி விசிட் டின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் என சென்னையில் இருந்த எடப்பாடி குழம்பிப் போயிருந்தார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.சிடம் டெல்லி விபரங்களை கேட்டறிந்ததற்கு பிறகே எடப்பாடியிடம் குழப்பம் மறைந்தது என்கிறது கோட்டைத் தரப்பு. அமித்ஷா-ஓ.பி.எஸ். சந்திப்பு குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ‘வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.சி.எஸ். போட்டியிட்டாலும் அவரை தங்களுடைய வேட்பாளராகத்தான் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அதனால் அவரது வெற்றியை எதிர்பார்க்கிறது. இதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் "மோடிக்கு எதிராக வீசிய அலைதான் தி.மு.க. கூட்டணியை 37 இடங்களில் ஜெயிக்க வைத்தது' என்பதைப் பொய்யாக்குவதற்காக வேலூர் வெற்றியை எதிர்பார்க்கிறார் அமித்ஷா.
 

admk



வேட்பாளர் ஏ.சி.எஸ்.ஸோ, "வேலூர் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறது' என்றும், அதனால், எடப்பாடியிடம் துரைமுருகன் வேலூரில் தி.மு.க. ஜெயிக்க அ.தி.மு.க. உதவ வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர் தலில் அ.தி.மு.க. ஜெயிக்க தி.மு.க. உதவி செய்யும் என்கிற ரீதியில் எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டிருக்கிறார்' என்றும் அமித்ஷாவிடம் புகார் தெரிவித்திருக்கிறார். மத்திய உளவுத்துறை விசாரணையில், "அ.தி.மு.க.-தி.மு.க.விற்கிடையே அப்படி ஒரு சமரசம் இருப்பது உண்மைதான். எம்.பி. தேர்தல்ல தி.மு.க. பெற்ற வெற்றியை வேலூரில் தக்க வைத்து தன் தலைமையைப் பலப்படுத்திக்கொள்ள நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்' என தெரிவிக்கப்பட... இதையடுத்தே டெல்லிக்கு ஓ.பி.எஸ். அழைக்கப் பட்டார்.


அ.தி.மு.க.-தி.மு.க. சமரச திட்டத்தை ஓ.பி.எஸ்.ஸிடம் விவரித்து, "இது உண்மையா?' என சீறியிருக்கிறார் அமித்ஷா. இதனை ஓ.பி.எஸ். சற்றும் எதிர்பார்க்கவில்லை. "எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இல்லை ஜி. இருப்பினும் உங்கள் சந்தேகத்தை புறக்கணிக்கவில்லை, எடப்பாடியிடம் விசாரிக்கிறேன். தி.மு.க.விடம் அப்படி ஒரு தேர்தல் உறவு எடப்பாடிக்கு இருந்தால் அதனை கண்டிக்கிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்' என விசுவாசத்துடன் சொல்ல, "நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் நடக்கிற அனைத்து அரசியலும் எனக்கு வந்தபடிதான் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்கிற மாதிரி எது நடந்தாலும் டெல்லியின் முடிவு வேறு மாதிரி இருக்கும்' என ஆவேசப்பட்டிருக்கிறார் அமித்ஷா.

அப்போது, "நீங்கள் அமைதியாக இருங்கள். எப்போதும் உங்களுக்கு நாங்கள் விசுவாசிகள்தான்' என்றிருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்பிறகு அரசுக்கு தேவையான நிதியை பெறும் வகையில் சில கோரிக் கைகளை அமித்ஷாவிடம் விவாதித்த ஓ.பி.எஸ்., "டெல்லி ஆதரவுடன் சிறையிலிருந்து சசிகலா விரைவில் ரிலீஸ் ஆகப்போறதாகவும், வெளியே வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அவர் பொறுப்பேற்கவிருப்பதாகவும் தகவல் வருகிறது ஜி. அது உண்மையா? உண்மையானால் உங்களையே நம்பியிருக்கும் என் நிலை என்ன?' என்று ஆதங்கத்துடன் ஓ.பி.எஸ். கேட்க, "எங்களை நம்புகிறீர்கள்தானே. உங்களை கைவிட மாட்டோம்' என சொல்லியிருக்கிறார் அமித்ஷா'' என விவரித்தனர் டெல்லி சோர்ஸ்கள். சென்னை திரும்பியதும் எடப்பாடியை சந்தித்து டெல்லியில் அமித்ஷா ஆவேசப்பட்டதை முழுமையாக ஓ.பி.எஸ். விவரித்திருக்கிறார். இதனையடுத்தே வேலூரில் அ.தி.மு.க.வினரை விரட்ட துவங்கியிருக்கிறார் எடப்பாடி.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.