ADVERTISEMENT

நீட் கூடுதல் மதிப்பெண்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு..!

03:31 PM Jul 12, 2018 | Anonymous (not verified)


தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கவேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ளது.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்த பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மே 6ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என்றும், இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிழையாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என்றும் மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய சுமார் 24,700 பேருக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகுவது என முடிவுகள் எடுத்துள்ளனர்.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ. அதிகாரிகள், மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். அந்த அமைச்சகம் அனுமதி அளித்ததும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்யும்.

ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு போட்டு தீர்ப்பைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT