Skip to main content

சாதி, மதத்தை தூண்டுகின்ற படம் இது அல்ல!! - ‘ருத்ர தாண்டவம்’ படத்தை புகழ்ந்த கிருஷ்ணசாமி, அர்ஜூன் சம்பத்!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

d

 

மோகன். ஜி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சிகளைப் பார்த்த ஹெச். ராஜா, கிருஷ்ணசாமி, ராதாரவி, அர்ஜூன் சம்பத் முதலானவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தப் படம் தொடர்பாக தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இதுதொடர்பாக கூறியதாவது, "பொதுவாக நான் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. திரைப்படங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், அது இளைஞர்களிடம் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்தும் கடந்த 20 ஆண்டுகளாக அதனை ஒரு இயக்கமாகவே செய்துவருகிறேன். இந்தப் படத்தில் மோகன் அவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிக அழுத்தமான கதையைக் கூறியிருக்கிறார். இந்தப் போதைப் பொருட்கள் மூலமாகத்தான் பல்வேறு வகையான சண்டைகளும், சச்சரவுகளும் இந்த சமூகத்தில் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். எனவே, இந்தப் படத்தைப் பாடமாக எடுத்துக்கொள்வது பாராட்டக்கூடிய விஷயம். அதில் பிசிஆர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, மதமாற்றம் தொடர்பான நடைபெற்றுவரும் சம்பவங்களைக் கூறியிருக்கிறார். போதைப் பொருட்களுக்கு எதிரான இந்தப் படம் ஒரு இயக்கமாக நிச்சயம் முன்னெடுக்கப்படும்" என்றார். 

 

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது, "முதலில் மோகன். ஜி அவர்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். மேலும் அம்பேத்கார் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே தலைவர் என்பதுபோல் இதுவரை கூறப்பட்டுவந்ததை இந்தப் படம் உடைத்தெறிந்துள்ளது. பட்டியலின மக்கள் நீதிக்கும், நியாயத்துக்கும் எப்படி துணை நிற்கிறார்கள் என்பதை வெகு சிறப்பாக காட்டியுள்ளனர். சாதி, மதத்தைத் தூண்டுகின்ற படம் இது அல்ல. போதை பொருட்கள் பழக்கத்திற்கு எதிராக படம் நிறைய பேசுகிறது. அற்புதமான விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற படமாக இது இருக்கிறது. இந்தப் படத்தை வைத்து சாதி, மத மோதல்களைத் தூண்டலாம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இந்தப் படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.