Skip to main content

பாவத்தைக் கொண்டு அவரின் தலையெழுத்தை நிர்ணயிக்கமுடியும் !

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

முனைவர் முருகு பாலமுருகன் 

"காலையில் பூத்தால் மாலையில் வாடிவிடுவோம்' என நினைத்து பூக்கள் பூப்பதில்லை. "இன்று பூத்து மணம் வீசி அனைவரையும் மகிழ்விப்போம்' என்ற நம்பிக்கையில்தான் பூக்கின்றன. மனித வாழ்வும் அப்படிதான். வாழும் இந்த நொடி மட்டுமே நிஜம் என்பதை உணர்ந்தாலும், ஆசைகளும் தேவைகளும் அதிகப்படியாகதான் இருக்கின்றன. ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் சாலையில் திரியும்போது ஆறுதலுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அதேவாழ்வில் உயர்வும் பெயரும் புகழும் வரும்போது உண்ண நேரமிருக்காது. சுதந்திரமாக வீட்டைவிட்டு வெளியே வரக்கூட முடியாது. கைதிக்கு ஸ்பெஷல் அறை கொடுத்தது போலிருக்கும் வாழ்க்கை. நேரத்திற்கு சாப்பிட்டோம், சுகமாக வாழ்ந்தோம் எனக் கூறுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவையனைத்தையும் அவரவரின் ஜனன ஜாதகமே நிர்ணயிக்கின்றது.

lord shiva

ஜோதிடரீதியாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பலமான கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே சுகபோகமான வாழ்க்கை அமையும். 12 வீடுகளில் 9 கிரகங்களும் வலுப்பெற்று அமையப்பெறுவது கோடியில் ஒருவருக்குதான் நடக்கும். அப்படி அமைந்துவிட்டால் அவருக்கு தேவர்களுக்கு ஒப்பான வாழ்க்கை அமையும். ஆனால் வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. எப்பொழுது முன்னேறுவோம்- எப்பொழுது வெட்டுப்பட்டு வீழ்வோம் என நமக்கே தெரியாது. ஒருவர் எந்த லக்னத்தில் பிறக்கின்றாரோ அந்த லக்ன பாவத்தைக் கொண்டு அவரின் தலையெழுத்தை நிர்ணயிக்கமுடியும். அதேபோல், லக்னாதிபதி அமையும் இடத்தைப் பொருத்தும் அவரது குணநலன்கள், தோற்றம், முகப்பொலிவு, உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம், அவரின் வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறியமுடியும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த லக்னாதிபதி எந்த கிரகச் சேர்க்கைப் பெற்றால் நல்லது என பார்க்கும்போது, அதில் பல நுணுக்கங்கள் உள்ளன.

லக்னாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளின் சேர்க்கைப் பெறுவது சிறப்பு. லக்னாதிபதி சேர்க்கைப்பெறும் கிரகங்கள் சுபகிரகம் மட்டுமின்றி, லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவும் இருக்கவேண்டும். நவகிரகங்களில் குரு, சுக்கிரன், சுபர் சேர்க்கை பெற்ற புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை சுப கிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, அசுபர் சேர்க்கைப்பெற்ற புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை பாவகிரகங்கள் ஆகும்.சூரியன், குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு. அதேபோல சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு. நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைவதும், ஒருவர் வீட்டில் மற்றொருவர் அமைந்து பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல யோகத்தை உண்டாக்கும். லக்னத்தில் சுபர் இருந்தால் சிறப்பென்றாலும், சுபகிரகமான குரு- மேஷம், கடகம், சிம்மம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும், ரிஷபம், துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும் மாறிவிடும்.

lord shiva

எடுத்துக்காட்டாக மேஷம், கடகம், சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு குரு லக்னாதிபதிக்கு நட்பு என்பதால் நற்பலனைத் தரும். ரிஷப, துலா லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரனுக்கு குரு பகை என்பதால் அவ்வளவு சிறப்பான பலனைத் தரமாட்டார். ஆதலால் லக்னாதிபதியுடன் சேர்க்கைப் பெறும் கிரகம் சுபராக இருப்பது மட்டுமின்றி, லக்னத்திற்கும் சுபராக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு லக்னத்தில் பாவ கிரகம் அமைவது கெடுதியாகும். சனி பாவகிரகம் என்பதால் மேஷம், விருச்சிகம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமைந்தால் கெடுதலை ஏற்படுத்தும். அதுவே கன்னி, துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே சனி அமையும்போது சோம்பல்தனமும், முன்னேற்றத்தடைகளும் ஏற்படும் என்றாலும் நற்பலனைத் தருவார்.

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.