Skip to main content

வருமான வரித் துறையை எதிர்த்த வழக்கு; வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்!

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

 OPS Withdrawn Case against Income Tax Department

 

தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த காலங்களில் சோதனை நடத்தினர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ்.க்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில், 2015 - 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது வருமான வரித் துறை. 

 

அந்த நோட்டீசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமான வரித் துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தது. அத்துடன், "வருமான வரித் துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது" என்றும் தெரிவித்திருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "வருமான வரித் துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித் துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்"  என்று ஓ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டார் நீதிபதி.

 

 

சார்ந்த செய்திகள்