Skip to main content

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி மரணம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
Nellie District Congress Executive Issue; Police serious investigation

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகை சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Nellie District Congress Executive Issue; Police serious investigation

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராஜர் மீது அளப்பரிய பற்று கொண்டு இளமை பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிக்கின்ற கட்சிப் பணிகளை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைவேற்றி இயக்கப் பணியாற்றி வந்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nellie District Congress Executive Issue; Police serious investigation

முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயக்குமாரின் இந்த கடிதம் இதுவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாராக எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்