Skip to main content

துக்க நிகழ்வில் கலந்துகொள்ள மோடியிடம் அனுமதி கேட்கவேண்டியதில்லை: திருநாவுக்கரசர் தாக்கு!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018


புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் "நடராஜனின் இறப்பு தமிழ் உணர்வாளர்களுக்கு பேரிழப்பு "என்றே கூறினர்.

தஞ்சை அருளானந்தம் நகரில் வைக்கப்பட்டிருந்த நடராஜனின் உடனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், "நடராஜனின் இறப்பு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 1980ல் இருந்தே அவரை நான் நன்கு அறிவேன். அவருடன் பல நேரங்களில் இணைந்து பணிபுறிந்துள்ளேன்.

மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மொழிப் போராட்டத்தில் பல மாணவர்களை ஒருங்கிணைத்தவர், மக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்று நல்ல முறையில் செயல்பட்டவர். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா தனியாக தனிகட்சி துவங்கும் போது நானும், நடராஜனும் இணைந்து அரசியலில் ஜெயலலிதா நிலைத்து நிற்கவும், உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும் இணைந்து செயல்பட்ட பசுமையான நினைவுகள் மறக்க முடியாதது.

ரூ.25லட்சம் செலவில் தஞ்சையில் சிவாஜிக்கு சிலை அமைக்க காரணமானவர். தமிழ் உணர்வாளர்களை இனம் கண்டு ஊக்குவித்தவர். ஜெயலலிதா வளர்ச்சிக்கு பக்கப் பலமாக நின்றவர். பலர் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் வருவதற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார்.

மன்மோகன் சிங், வாஜ்பாய், சோனியா காந்தி, கன்சிராம், மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்றவர்களிடம் இனக்கமாக இருந்தவர். அரசியல் ஞானம் பெற்று வெற்றிக்கான யுக்தியை அமைத்து செயல்பட்டார். ஜெயலலிதா, சசிகலா, நடராஜன், ஆகியோரிடம் பழகியவர்கள் தான் இன்று முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருக்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி வேறு துக்க நிகழ்ச்சி வேறு இந்த நிகழ்ச்சிக்கு வர மோடியிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை, அப்படியே கேட்டாலும் அவர் போக வேண்டாம் என சொல்லியிருக்க மாட்டார்.

பல ஆண்டுகள் ஒன்றாக பழகியவர்கள், எவ்வளவு முறன் இருந்தாலும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தவறு ஒன்றும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் மனிதாபிமானமுள்ள, நன்றி மறவாத செயலாக இருந்திருக்கும் என்றார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறுகையில், மறைந்த நடராஜன் மிக சிறந்த தமிழ்தேசிய உணர்வாளர். ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை வரும் தலைமுறைக்கு நினைவு கூறும் வகையில் தனது சொந்த இடத்தில் பல கோடி பணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை அமைத்தவர்.

இதுவரை அரசியலில் எந்த பதவியிலும் இருந்தது கிடையாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தது கிடையாது. ஆனால் எப்போதும் அரசியலில் பேசக்கூடிய விவாத பொருளாகவே இருந்துள்ளார். அ.தி.மு.க ஆட்சி அமைய திரைமறைவாக இருந்து காய் நகர்த்தியவர். அவரது மனைவி சசிகலா சிறைக்கு சென்ற பிறகே மனம் உடைந்து போனார் . அவருடைய இழப்பு தமிழ் உணர்வாளர்களுக்கு பேரிழப்பு.

ஆட்சியில் இருப்பவர்கள் மனிதாபிமான அடிப்படையில் இறங்கல் தெரிவித்திருக்க வேண்டும், அவர்கள் நேரடியாக கூற முடியவில்லை என்றாலும் தொலைப்பேசி மூலமாகவாவது அவர்களின் குடும்பத்தினரிம் பேசியிருக்கலாம். 1996ல் அதிமுக கூட்டணியில் வி.சி.க பங்கு பெற காரணகர்த்தாவாக செயல்பட்டவர் என்றார்.

சார்ந்த செய்திகள்