Skip to main content

‘தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது’ - எடப்பாடி பழனிசாமி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
'The Election Commission has approved' - Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற நேர்காணல் நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையே திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கூடாது என, தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சம்பந்தமான சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்.

'The Election Commission has approved' - Edappadi Palaniswami

அதிலும் குறிப்பாக வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். இருப்பினும் தான் அளித்துள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு மார்ச் 25 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

'The Election Commission has approved' - Edappadi Palaniswami

இத்தகைய சூழலில் சூரியமூர்த்தி அளித்த மனு மீது பதிலளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் என்னை (எடப்பாடி பழனிசாமி) அங்கீகரித்துள்ளது. நீதிமன்றத்திலும் உத்தரவு உள்ளது. எனவே சூரியமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்