Skip to main content

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மருத்துவர் கைது..!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

Doctor arrested for selling Remtacivir in illegal way

 

இந்தியா முழுவதும் கரோனாவின் பரவல் அதிகமாக உள்ளது. பல மாநிலங்களிலும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைகளில் இடம், படுக்கை, மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் என அனைத்துக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்குவதற்காக மக்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

 

மேலும், மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தால் பலரும் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை உயிர் காக்கும் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில், மருந்து கடைகளில் இந்த மருந்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். அதையடுத்து மருத்துவப் பணிகள் கழகம் மூலம் இந்த மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

 

Doctor arrested for selling Remtacivir in illegal way

 

இங்கு தினமும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், இந்த மருந்தைக் கள்ளச்சந்தையில் வாங்கி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். அவரிடம் இருந்து சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவரான முகமது இம்ரான்கான் (26) என்பவர் 4 ஆயிரத்து 700 ரூபாய் மருந்தை, 6 ஆயிரத்துக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் 20 ஆயிரத்திற்கு விற்று வந்தார். அவருடைய நண்பரான விஜய் (27) என்பவரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை எஸ்.பி. சாந்திக்கு நேற்று (29.04.2021) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மருத்துவர் இம்ரான்கானை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ரெம்டெசிவிர்’ மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார். உடந்தையாக  இருந்த நண்பர் விஜய்யும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்