Skip to main content

"எங்களின் தினக் கூலி ரூ.200 தான்!" - அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் மனு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Annamalai University day laborers petition to the Collector urging him to make the work permanent

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 16 ஆண்டுகளாக தினக்கூலி ஊழியர்களாகப் பணியாற்றும், 140 பேர் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், மிகவும் அடிப்படையான அத்தியாவசியப் பணிகளான விடுதிகள் துப்புரவு பிரிவு உள்ளிட்ட துறைகளில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, 140 பேர் தினக்கூலி அடிப்படையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம்.

 

எங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எங்கள் குடும்பம் நடத்தப் போதுமானதாக இல்லை என்ற போதிலும் எங்களது பணி நிரந்தரம் செய்யப்பட்டு ஊதியம் உயர்த்தப்படும், அதன் மூலம் எங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களில் பலர், ஏறத்தாழ 40 வயதைக் கடந்துவிட்டோம். எங்களது பணி நிலை மற்றும் ஊதியத் தொகை அளவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கருணை அடிப்படையில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய பல்கலைக்கழக நிர்வாகியாக இருந்த அரசின் முதன்மைச் செயலாளர் சிவதாஸ்மீனா, நாங்கள் பெற்றுவந்த தினக்கூலி ஊதியம் ரூ.40 என்பதை 150 ஆக உயர்த்தி வழங்கினார்.

 

பிறகு, 2018 ஏப்ரல் மாதம் ஊழியர்களுக்கு தினக்கூலி தொகை 150 லிருந்து 200 ஆக மாற்றி வழங்கப்பட்டது. வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே மாத ஊதியமாகப் பெற்று சொற்ப வருவாயில் எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். எங்களில் பெரும்பான்மையானோர், 40 வயதைக் கடந்துவிட்ட நிலையில், நெருக்கடியான வாழ்நிலையைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமன்றக் குழுவின் முடிவின்படி, எங்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழிலாளர் நலச்சங்க தலைவர் ராஜா, செயலாளர் வினோத்குமார், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்