Skip to main content

கடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன்! பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கடுமையாக விமர்சித்தார்.  அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் சேரனின் நிலையை நினைத்து வேதனைப்பட்டார்.

 

அவர், ’’நான் பார்த்த வரையில் சமீபத்தில் எனக்கு ரொம்ப மனவேதனையை கொடுத்த நிகழ்வு என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அழுததுதான்.  நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை.  பார்க்கவும் மாட்டேன்.  அந்த நிகழ்ச்சியால் சமூகத்திற்கு எந்தப்பலனும் இல்லை.  

 

சேரன் பங்கேற்று பிரச்சனை வந்தபோது என்னிடம் அந்த வீடியோவை காட்டினார்கள்.   

 

ameer

 

நானும், பாலாவும் உதவி இயக்குநராக இருந்தபோது பார்சன் காம்ப்ளக்சில் இருந்தோம்.   சிறிய அறை என்பதால் வளாகத் தில் உள்ள கோவில் வாசலில் பெரும்பான்மையான நேரங்கள் படுத்துக்கிடப்பேன்.   அப்போது பொற்காலம் ரிலீசான நேரம்.  பாரதிராஜாவை பார்க்க பொக்கேவுடன் காரில் இருந்து இறங்கி கம்பீரமாக சென்றார் சேரன்.    அதன்பின்னர், நான்  கடன் வாங்கி ராம் படத்தை எ டுத்துக்கொண்டிருந்தேன்.  அப்படி இருந்தும், 25 ஆயிரம், 50 ஆயிரம் என்று கடன் வாங்கி ராம் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது,  ஆட்டோகிராப் படத்தை எடுத்து முடித்திருந்த சேரன், விழாவில் பேசும்போது, எத்தனை கையெழுத்துதான் போடுவது என்று தனக்கு இருக்கும் கடன் பிரச்சனையை சொல்லி மேடையிலேயே அழுதார்.   அவர் மேடையை விட்டு இறங்கியதும், கையை பிடித்துக்கொண்டு, நான் வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் தரட்டுமா? என்று கேட்டேன்.  வேண்டாம்...தேவைப்பட்டால் கேட்டு வாங்கிக்கிறேன் என்று சொன்னார்.  

 

ஆட்டோகிராப் வெற்றி நினைத்து பார்க்கமுடியாத வெற்றி.  அந்த வெற்றி அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது.   அதன் பின்னர் லயோலா கல்லூரியில் பச்சை மனிதன் திரைப்பட விழாவிற்கு காரில் இருந்து இறங்கி நடந்து வந்தார்.   அவர் மேடைக்கு வரும் வரைக்கும்  இந்த பக்கம் ஆயிரம் பேர், அந்த பக்கம் ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள்.   அதைப்பார்த்து பிரமித்தேன்.  

 

அவர் அலுவலத்திற்கு சென்றாலும் பிரமிப்பேன்.  பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என்று குவிந்து கிடக்கும்.    அப்படிப்பட்ட சேரன் பிக்பாஸுக்கு சென்றார்.   போவதுமுடிவெடுத்துவிட்டு முதல் நாள் சொல்லிக்கொண்டு போனார்.  அந்த நேரத்தில் என்ன சொல்வது. சரி, என்று சொல்லிவிட்டேன்.

 

அந்த நிகழ்ச்சியில், ஒரு பெண் தன்னை கையை பிடித்து இழுத்துவிட்டதாக புகார் கூறுவதையும், அதற்காக மனம் நொந்து, நான் எதற்காக இங்கே வந்தேன்... என் பிள்ளைகளுக்காகத்தான் வந்தேன்.. என்று அழுதபோது எனக்கு வேதனையாக இருந்தது.    அப்போது எனக்கு வந்த ஆத்திரத்திற்கு  நேரே அந்த ஸ்டூடியோவுக்கு சென்று உடைத்துக்கொண்டு போய் சேரனை தூக்கிட்டு வந்திடலாம் என்று தோணுது.   சமூகம் அவருக்கு கொடுத்திருக்கும் இடம்  சாதாரணது கிடையாது.   ஒரு முதல்வரை கடத்திக்கொண்டு போய் விவசாயம் பார்க்க வைத்ததாக தமிழ்சினிமாவில் வந்த முதல் கதை தேசியகீதம் படம்தான்.   அப்படிப்பட்ட இயக்குநர் இப்படிப்போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு.   சினிமாவில் புகழ் வெளிச்சம், எதுவும் நிரந்தமில்லை’’என்று தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்