Skip to main content

எ.வ.வேலுவை அனுமதித்த ஐ.டி. அதிகாரிகள்! 

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

E V Velu moved to senji for election campaign with mk stalin

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் சில நாட்களாக வேட்பாளர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். 

 

இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் அலுவலகம், கல்லூரி, நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேவேளையில், எ.வ.வேலுவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை சென்றிருந்தார். அவர், எ.வ.வேலுவின் கல்லூரியில் தங்கியிருந்தார். சோதனையிட வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், எ.வ.வேலுவின் கல்லூரியில் நின்றிருந்த மு.க.ஸ்டாலினின் பிரச்சார வாகனத்தையும் சோதனை செய்தனர். அதேவேளையில் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டமிட்டப்படி எ.வ. வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

திருவண்ணாமலையில் 4.30 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் முடித்துக்கொண்டு செஞ்சிக்கு பயணமானார் மு.க.ஸ்டாலின். அவருடன் எ.வ.வேலுவும் புறப்பட இருந்தார். ஆனால், வருமானவரித்துறையினர் சோதனையினால் அவர் அனுமதிக்கப்படுவாரா எனும் கேள்வி இருந்தது. இந்நிலையில், செஞ்சி பிரச்சாரத்திற்கு எ.வ.வேலு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரம் முடித்துக்கொண்டு திரும்பி திருவண்ணாமலைக்கு வரவேண்டும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்