Skip to main content

“ராகுல் காந்தி தப்பி ஓடுவது இது முதல் முறையல்ல” - ஸ்மிருதி இராணி விமர்சனம்

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
Smriti Irani criticizes Rahul Gandhi

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயரை வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்தது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டார். 

அதில், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிட உள்ளார் என்றும் கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை இன்று (03-05-24) தாக்கல் செய்தார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேபரேலி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்ததைப் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், அமேதி தொகுதி பா.ஜ.க வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி இன்று (03-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அமேதியில் இருந்து ராகுல் காந்தி தப்பி ஓடுவது இது முதல் முறையல்ல. 2019 இல் கூட அவர் அமேதியை விட்டு வெளியேறி வயநாட்டில் இருந்து போராடினார். இன்று காந்தி குடும்பம் அமேதியை விட்டு வெளியேறி தோல்வியை அறிவிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பிரதமர் தனது மக்களவை நேர்காணலின் போதும் இதைத்தான் கூறியிருந்தார்.

குறிப்பாக வயநாடு மக்களிடம் காங்கிரஸ் கூறிய பொய்கள் இன்று அம்பலமாகி உள்ளன. வயநாடு மக்களிடம், தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பே, வேறு தொகுதியிலும் போட்டியிட விரும்புவதாக ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்