Skip to main content

நீளமான டெலஸ்கோப்புகள்

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

கத்தோலிக்க தேவாலயம் கலிலியோவை மிரட்டித் தனிமைப் படுத்தியது. ஆனால் அவர் வெளியிட்ட கோட்பாடுகள் விரைவாக பற்றிக் கொண்டன. ஐரோப்பா முழுவதும் டெலஸ்கோப் பரவியது.

 

telescope

 

அறிவியல் பூர்வமான உண்மைகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் பிறந்தவர் ஜோகன்னஸ் கெப்லர். இவர் கண்ணாடி குறித்து ஆய்வு செய்தவர். பிறகு வானவியலில் ஈடுபாடு கொண்டார்.

 

இவர் தான் கண்ணாடி லென்ஸ் எவ்வாறு ஒளியை பிரதிபலிக்கிறது என்பதை முதன்முதலில் புரிந்து கொண்டவர். லென்சுகளின் வடிவத்தை மாற்றி அவை பொருத்தப்படும் இடங்களை மாற்றினால் டெலஸ்கோப்பில் தெரியும் உருவத்தின் தரம் உயரும் என்று கெப்லர் கூறினார்.

 

டெலஸ்கோப்பின் முதல் லென்ஸ், குழிலென்ஸாக இருந்தது. அடுத்தது குவிலென்ஸாக இருந்தது. குழிலென்ஸுக்கு பதிலாக குவிலென்ஸை பொருத்தினார் கெப்லர். இது பார்க்கிற உருவங்களை பெரிதாக காட்ட உதவியது. கலிலியோ உருவாக்கிய டெலஸ்கோப்புக்கு பதிலாக இரண்டு குவிலென்ஸ் பொருத்தப்பட்ட கெப்லரின் டெலஸ்கோப்புகள் வரவேற்பை பெற்றன. இருந்தாலும் பிரகாசமான கோள்களைச் சுற்றி தோற்றமளிக்கும் வண்ண வளையங்கள் கெப்லரின் டெலஸ்கோப்பில் சிதறின. ஒவ்வொரு வண்ணத்தையும் வேறுபட்ட அளவில் லென்ஸுகள் வளைத்தன.

ஆனால், மங்கலான தோற்றத்தை தெளிவாக காட்டியது கெப்லரின் டெலஸ்கோப். கோளவடிவிலான லென்ஸ்கள் ஒளிக்கதிர்களை வளைக்கின்றன. அவை ஒளியை ஒரே இடத்தில் சந்திக்கவிடாமல் செய்கின்றன.

 

telescope

 

மனிதனின் விழிலென்ஸை நன்கு ஆய்வு செய்த கெப்லர், கோளவடிவிலான லென்ஸைக் காட்டிலும் வித்தியாசமான வடிவத்தில் டெலஸ்கோப் லென்ஸ் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். ஆனால் வேறுபட்ட வடிவங்களில் லென்ஸ்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகவில்லை. அதே சமயம் வழக்கமான வளைவுகளை காட்டிலும் கூடுதல் வளைவுடன் கோளவடிவ லென்ஸ்களை உருவாக்கினர். இந்த லென்ஸ்கள் ஒளியை குறைவாகவே வளைத்தன.

 

டெலஸ்கோப்பின் இரண்டு லென்ஸுகளுக்கும் இடைப்பட்ட தூரம் அதிகமானால் மிகவும் தொலைவுள்ள பொருட்களை அருகில் பார்க்க முடியும் என்று வானியல் அறிஞர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் மிக நீளமான டெலஸ்கோப்புகளை பயன்படுத்த தொடங்கினர்.

 

டெலஸ்கோப்புகளின் நீளம் நாளடைவில் மிக அதிகமாக நீண்டு கொண்டே போனது. சில டெலஸ்கோப்புகள் 100 அடி நீளம் வரை இருந்தன. இத்தகைய டெலஸ்கோப்புகளை பயன்படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருந்தன.

 

இந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. ஒரு சமயத்தில் 1000 அடி நீளத்தில் டெலஸ்கோப் உருவாக்கினால் நிலவில் வாழும் விலங்குகளைக் கூட பார்க்கலாம் என்று கூறும் அளவுக்கு சிலர் போனார்கள். நீளமான டெலஸ்கோப்புகள் கூடுதல் கவனத்தை பெற்றாலும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருந்தாலும், அந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 30 முதல் 40 அடி நீள டெலஸ்கோப்புகளில்தான் முக்கியமான பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

 

1600களின் தொடக்கத்தில் கலிலியோ தனது 4 அடி நீள டெலஸ்கோப்பை உருவாக்கினார்.  1647ல் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் ஹவேலியஸ் 12 அடி நீள டெலஸ்கோப்பை உருவாக்கினார். அது ஒரு தொடக்கம் தான்.

 

12 அடி நீளமுள்ள டெலஸ்கோப்புகள் பார்க்கும் உருவத்தை 50 மடங்கு பெரிதாக காட்டின. அவை வானியல் அறிஞர்களுக்கு போதவில்லை. ஹவேலியஸ் 60 முதல் 70 அடி நீளமுள்ள டெலஸ்கோப்பை உருவாக்கிப் பயன்படுத்தினார்.

 

அதுவும் திருப்தி அளிக்காததால் பால்டிக் கடற்கரையோரம் 150 அடி நீள டெலஸ்கோப்பை நிறுவினார். இதற்காக அவர் 90 அடி உயரத்தில் ஒரு கம்பத்தை நட்டார். அதன் குறுக்காக மரக்குழல் ஒன்றை அமைத்தார். காற்றில் அசையாமல் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இருந்தாலும், அந்த டெலஸ்கோப் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பலமான காற்றில் அது அசைந்தது. தெளிவான உருவம் கிடைக்கவில்லை. எனவே எப்போதாவது மட்டுமே அது பயன்பட்டது.

 

ஜோகன்னஸ் ஹவேலியஸ் வாழ்க்கை குறிப்பு

 

போலந்து நாட்டைச் சேர்ந்த டான்ஸிக் என்ற நகரில் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாக பிறந்தவர் ஹவேலியஸ்.

 

சட்டம் படித்த இவர் ஐரோப்பா முழுவதும் சுற்றினார். பிறகு, தனது சொந்த ஊரிலேயே மதுபான தொழிற்சாலையை உருவாக்கினார். அரசியலிலும் ஈடுபட்டார்.

 

அந்த சமயத்தில்தான் வானவியல் பிரபலம் அடைந்தது. ஹவேலியஸும் வானத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 1641ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே முதல் ஆய்வுக்கூடத்தை அமைத்தார். விரைவிலேயே சிறிய அளவு ஆய்வுக்கூடம் உதவாது என்று புரிந்துகொண்டார்.

 

வானத்திலுள்ள நட்சத்திரங்களை வரைபடமாக கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

 

டெலஸ்கோப்புகள் வேலை செய்யும் விதம் குறித்த ஹவேலியஸின் ஞானம் நீளமான, மிக நீளமான டெலஸ்கோப்புகளை உருவாக்க தூண்டியது. இவர் அமைத்த 150 அடி நீள டெலஸ்கோப்பை பார்க்க போலந்து ராஜாக்களும், ராணிகளும் வந்த வண்ணம் இருந்தார்கள்.

 

இவருக்கு தேவையான உதவித் தொகை அளிக்கவும் உத்தரவிட்டார்கள். அன்றைய காலகட்டத்திலிருந்த ராயல் சொஸைட்டியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 

நிலவின் மிக விரிவான வரைபடத்தை இவர் உருவாக்கினார். புதன் கிரகத்தின் படிப்படியான தோற்றங்களை வரைந்தார். சூரியனின் மேற்பரப்பில் தெரியும் கரும்புள்ளிகளை கண்டறிந்தார். ஏராளமான குறுங்கோள்களை கண்டறிந்து தெரிவித்தார்.

 

1663ஆம் ஆண்டு இவரது முதல் மனைவி இறந்தார். அதை தொடர்ந்து 16 வயது நிரம்பிய எலிசபெத் கூப்மேன் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர் தான் ஹவேலியஸின் ஆய்வுகளுக்கு உதவியாக இருந்தார். 1679ஆம் ஆண்டு ஹவேலியஸின் ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அரிதான பல வரைபடங்கள் எரிந்து நாசமாயின.

 

ஆனால் 1687ல் ஹவேலியஸ் இறந்த பிறகு எஞ்சியிருந்த பல முக்கியமான வரைபடங்களை எலிசபெத் வழங்கினார்.

 

ஹவேலியஸின் நிலா வரைபடம் (1647)

 

hevelius moon art

 

முதல் டெலஸ்கோப் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹவேலியஸ் நிலவின் முதல் முழுமையான வரைபடத்தை உருவாக்கினார்.
 

தனது டெலஸ்கோப் மூலம் 4 ஆண்டுகள் நிலாவை இவர் ஆய்வு செய்தார். பகுதிபகுதியாக ஆய்வு செய்து முழுமையான வரைபடம் ஒன்றை உருவாக்கினார். நிலாவில் உள்ள மலைகளின் உயரத்தை கூட இவர் அனுமானித்தார்.

 

தான் வரைந்த வரைபடத்தில் நிலாவில் உள்ள மலைகளுக்கு பூமியில் உள்ள மலைகளின் பெயரையும், கடல்களின் பெயரையும் சூட்டினார்.

 

1647ல் ஹவேலியஸின் அட்லஸ் வெளியிடப்பட்டது. அதன் உதவியுடன் வானியல் அறிஞர்கள் நிலாவை ஆய்வு செய்தனர். அடுத்த 100 ஆண்டுகள் வரை அந்த வரைபடம் தான் வானியல் அறிஞர்களுக்கு உதவிகரமாக இருந்தது.

 

ஹவேலியஸின் டெலஸ்கோப் மற்ற டெலஸ்கோப்புகளைக் காட்டிலும் துல்லியமான விவரங்களை அளித்தது. அவர் வரைந்த நிலா வரைபடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

 

வெறும் கண்ணால் பார்க்கும் போது நிலா கிரே மற்றும் வெள்ளை நிறம் கலந்த பந்து போல காட்சியளிக்கும்.

 

கலிலியோவின் நிலா வரைபடம் (1610)

 

galileo moon art

 

கலிலியோ தனது மிகச் சிறிய டெலஸ்கோப்புகளின் உதவியால் நிலாவை வரைந்தார். நிலவின் கரிய மற்றும் வெளிச்சம் மிகுந்த மேற்பரப்புகளை அவர் வரைந்திருந்தார்.