Skip to main content

ஷாருக்கான் முன் விளையாடிய அனுபவத்தைப் பகிரும் திரிபாதி!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

rahul tripathi

 

ஷாருக்கான் முன் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் குறித்து கொல்கத்தா அணி வீரர் திரிபாதி பேசியுள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடர், அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய திரிபாதி அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரனான வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். எனினும், இறுதியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திரிபாதி, பலரது கவனத்தையும் பெற்று வருகிறார். மேலும், அவருக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திரிபாதி ஷாருக்கான் முன் விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

 

அதில் அவர், "கொல்கத்தா அணிக்காக விளையாடுவது சிறப்பு வாய்ந்த ஒன்று. இது ஒரு பயணம். இந்தப் பயணத்தை நான் மனப்பூர்வமாக அனுபவிக்கிறேன். ஷாருக்கான் முன் கிரிக்கெட் விளையாடியது கூடுதல் சிறப்பு. கனவு நிறைவேறியது போல உள்ளது" எனக் கூறினார்.