Skip to main content

சட்ட விரோதமாக நிகழ்ந்த கருக்கலைப்பு; 17 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Tragedy befell a 17-year-old student at Illegal abortion in dindugal

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவருடைய பெற்றோர் இறந்துவிட்ட காரணத்தினால், திண்டுக்கல்லில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்தார். இவர், காந்திகிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் விடுதியில் தங்கி நோயாளிகளைப் பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை சந்திக்க திருச்சியில் வசிக்கும் அவருடைய அத்தை மீனாட்சி விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு மீனாட்சி சந்தேகமடைந்தார். அதன் பின்னர் அவர், மாணவியை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவியிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார். அப்போது, சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் கணக்காளராக வேலை செய்யும் ராம்குமார் என்பவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கல்லூரி விடுமுறையின் போது அம்பாத்துறையில் உள்ள அவருடைய அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, தன்னுடன் ராம்குமார் தனிமையில் இருந்ததாகவும், அதனால் தான் கர்ப்பம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மீனாட்சி, மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி அவர், மாணவியை திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு, கடந்த இரு நாட்களுக்கு முன் மருத்துவர் கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால், பல மணி நேரமாகியும் மாணவிக்கு உதிரப்போக்கு நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அங்குள்ள மருத்துவர்கள் மாணவியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (01-03-24) பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி சிறுமி என்பதால் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பற்றி குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் போலீசாருக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே மாணவியின் மூத்த சகோதரி, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், மாணவியின் காதலன் ராம்குமார், மாணவியின் அத்தை மீனாட்சி மற்றும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகிய 3 பேர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்