சிங்கப்பூரில் அண்மையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அணு ஆயுதங்களை ஒழிக்க வட கொரியா உறுதி அளித்தது. இதுதொடர்பான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அதிபர்களும் கையெழுத்திட்டனர்.
சண்டை நாடுகளாக வர்ணிக்கப்பட்ட இருநாடுகளின் தலைர்களும் சந்தித்துக் கொண்டது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “கடந்த கால கசப்புகளை அழித்துவிட்டு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்து பதிக்க இருக்கிறோம் எனவே உலகம், பெரியதொரு மாற்றத்தைக் காணப் போகிறது” என்று இரு தலைவர்களும் அறிவித்து இருக்கிறார்கள்.
வடகொரியா அதிபருடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கிம் ஜாங் உன்னுடன் நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. கருத்து வேறுபாடுகளை களைந்துகொள்ள ஏதுவாக இருந்தது. நானும், கிம்மும் இதுவரை எங்களுக்குள் நிலவிய கோபங்களை குறைத்துக் கொள்ள உதவியாக இருந்தது. எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை அவருக்கு தந்துள்ளேன். சர்வதேச பிரச்சினைகள் உட்பட எதுவாக இருந்தாலும் நள்ளிரவு என்று கூட பார்க்காமல் எந்த நேரமும் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளேன். எனவே வட கொரியாவிடம் இருந்து புதிய செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும்’’ என ட்ரம்ப் கூறியுள்ளார்.