ADVERTISEMENT

மன நலப் பயிற்சியா? பணம் காய்க்கும் மரமா? போலீஸ் கவுன்சிலிங் மோசடி!

03:04 PM Jul 11, 2020 | rajavel

ADVERTISEMENT

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிபதி பாரதிதாசனிடம் ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், "ஒரு ம__ பு__ முடியாது'' எனச் சொன்ன போலீஸ்காரர்கள் ஆகியோர் நடந்து கொண்ட விதம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கேள்வி எழுப்பியபோது, அந்தக் காவலர்கள் "மன அழுத்தத்தில் இருந்தார்கள்'' எனத் தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அத்துடன் "காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாயில் மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன'' எனத் தமிழக போலீசின் காவலர் நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் பதில் அளித்தார்.

ADVERTISEMENT

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர்களின் மன அழுத்தத்தை நீக்க பயிற்சி அளிக்கும் திட்டம் என்ன என நக்கீரன் ஆராய்ந்தது. இந்தத் திட்டம் 20.09.2018 அன்று முதல்வர் எடப்பாடியால் துவக்கி வைக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பிரபல மனநல சிகிச்சை மருத்துவமனையான NIMANS நிறுவனத்தின் டைரக்டரான பேராசிரியர் பி.என். கங்காதர் என்பவரது ஆலோசனையோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் போலீசார் மற்றும் மூன்றரை லட்சம் பேர் அடங்கிய அவர்களது குடும்பம் ஆகியோரது மன அழுத்தத்தை நீக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்குத் தமிழகத்தில் ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்பவர் மதுரையின் புகழ்பெற்ற மனநல மருத்துவரான டாக்டர் சி.ராமசுப்பிரமணியன். அவரிடம் இந்தத் திட்டத்தைப் பற்றி கேட்டோம்.

"2018 ஆம் ஆண்டு நிறைய காவலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களது மனநிலை சரியில்லாததால் அவர்களது கடமைகளில் இருந்து தவறினார்கள். அதனால் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் காவல்துறையில் இருந்து 200 பேர் உளவியல் படிக்கவும், சமூகவியல் படிக்க 200 பேர் என 400 பேரை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு NIMANS மருத்துவமனையில் ஐந்து நாட்கள் பயிற்சி கொடுத்தோம்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் போலீசாருக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளித்தோம். அவர்களின் மனஅழுத்த அளவைக் கண்டுடித்து, மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்போம். இதுவரை 75 ஆயிரம் காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளித்துள்ளோம்.

சிகிச்சை அளிக்கும் உளவியல் மருத்துவர்களுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை சிகிச்சைக்கான செலவாக அளித்துவிடும். இதுபோல நாங்கள் சிகிச்சை அளிப்பதை சாத்தான் குளம் சம்பவத்தில் விசாரிக்கும் நீதியரசர் பி.என்.பிரகாஷ் கேட்டார். அவர் முன் நான் ஆஜராகினேன்.

ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் வீடியோ மூலமாக ஆஜராகி இந்தத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். இந்தத் திட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவில்லை. நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளித்தோமா என்பதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல முடியாது. நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள், மன அழுத்தத்தால்தான் அப்படி நடந்து கொண்டார்கள் எனத் தமிழக போலீசார் கூறியது பற்றி எனக்குத் தெரியாது. உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறையில் காவலர் நலன் பிரிவைக் கவனிக்கும் உயர்போலீஸ் அதிகாரியான தாமரைக் கண்ணனிடம் கருத்துக் கேட்டார். அந்த முயற்சியில் தமிழக காவல்துறைக்கு உதவியாக இயங்கும் நாங்களும் கோர்ட்டுக்கு போனோம்'' என்றார்.

இந்த சி.ராமசுப்பிரமணியன் மதுரையில் ஒரு மனநல மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் தாமரைக் கண்ணனின் தூரத்து உறவினர். "நீங்கள் அளித்த சிகிச்சை பயன் அளிக்காமல் போனதால்தான் சாத்தான் குளத்தில் உள்ள போலீசார் கொலை செய்தார்களா?'' என ராமசுப்பிரமணியத்திடம் கேட்டோம். அதற்கு அவர், "நான் இந்தத் துறையில் புகழ் பெற்ற மருத்துவர். அதனால்தான் பெங்களூருவில் உள்ள NIMANS நிறுவனம் என்னை தேர்ந்தெடுத்தது. நானும் காவவர் நலன் பிரிவில் பதவி வகிக்கும் தாமரைக்கண்ணனும் உறவினர்கள் என்பது உண்மை. ஆனால் நாங்கள் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க அளிக்கும் சிகிச்சைக்கும் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்றார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய காவல்துறையைச் சேர்ந்தவர்கள், "தாமரைக் கண்ணன் சென்னை மாநகர உளவுத்துறையில் பணியாற்றியபோது ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டார். இந்த ஒரே காரணத்திற்காக எடப்பாடி அவரை ஒதுக்கி வைத்தார். டி.ஜி.பி. திரிபாதிக்கு நெருக்கமான அவரைச் சட்டம் ஒழுங்கு பதவிகளுக்குக் கொண்டுவர திரிபாதி முயற்சித்தார்.

அதற்கு உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, தாமரைக் கண்ணன் சசிகலாவின் உறவினர் என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்தார். டி.ஜி.பி.யின் செல்லப் பிள்ளையான தாமரைக்கண்ணன், காவலர்களுக்கு மனஅழுத்தத்தை நீக்குகிறேன் எனத் தனது உறவினரான ராமசுப்பிரமணியனுடன் சேர்ந்து கொண்டு அரசுப் பணத்தைக் கல்லாகட்டுகிறார். இவர்கள் காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கவும் இல்லை, காவலர்கள் மனஅழுத்தத்திற்கும் சாத்தான்குளம் கொலை சம்பவத்திற்கும் நீதிபதி பாரதிதாசனின் அவமானப்படுத்தியதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை'' என்கிறார்கள் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

தமிழக காவல் துறை என்றாலே, எல்லாமே செட்டப்தானா?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT