ADVERTISEMENT

அக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக? கே.சி.பழனிசாமி பதில்..!

06:12 PM Sep 28, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் வரை நீடித்த செயற்குழு கூட்டம், பிற்பகல் நிறைவு பெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பி. முனுசாமி, 7 -ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள் என்று கூறினார்.

இதுகுறித்து, அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வரும் 7 -ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறாரே?

சமீபகால அ.தி.மு.க வரலாற்றில் 5 மணி நேர கூட்டம் நடந்ததில்லை. அதுமட்டுமின்றி அவர்களிடம் ஒற்றுமையும் ஒருமித்தக் கருத்தும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் இன்றே அறிவித்திருப்பார்கள். அக்டோபர் 7 என்பதும்கூட இப்போதைக்குப் பிரச்சனையைத் தள்ளிவைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்களுக்குள்ளான இரகசிய சந்திப்புகள், டெல்லி தலைமை தலையீடு இவை எல்லாம் இருக்கும்.

டெல்லி தலையீடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களே?

மத்திய அரசை எதிர்ப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 -ஆம் தேதி வரை இந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை அவர்களுக்குள் நடந்து வருக்கிறது. அப்படி இருந்தும், அக்டோபர் 7 -ஆம் தேதி அறிவிப்பு என்பது அவர்கள் இந்தப் பிரச்சனையைத் தள்ளிதான் வைத்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இன்னும் முடிவுக்குவரவில்லை என்பதைதான் காட்டுகிறது. இன்னும் அவர்களுக்குள்ளான அணிதிரட்டல்கள், கொடுக்கல் வாங்கல், டெல்லி சிக்னல் இவை எல்லாம் இருக்கிறது.

தலைமையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இவர்கள் செயற்குழு கூட்டினார்கள். தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கட்சிக்காரர்கள் தேர்தலுக்கு எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப் பற்றி பேசினோம் என்று கூறிவிட்டு, 7 -ஆம் தேதி தான் முதல்வர் வேட்பாளர் பற்றி ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம் என்று தெரிவித்திருக்கலாம். இப்படி செய்திருந்தால், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அ.தி.மு.க.வின் மதிப்பு சிதைக்கப்படாமல் இருந்திருக்கும். இவ்வாறுகூட சொல்ல முடியவில்லை என்றால் இவர்கள் எப்படி மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை வளர்க்கப்போகிறார்கள். தொண்டர்களைத் திருப்தி படுத்தும் தகவலைக்கூட இவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை. மேலும் அ.தி.மு.க.வின் தொண்டர்களைச் சோர்வடையவைக்கும் நிகழ்வு இது. ஆகஸ்ட் 15 -ஆம் தேதி வந்த பிரச்சனையையே தொண்டர்கள் விரும்பவில்லை.

7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று நம்பிக்கையில்லையா?

பஞ்சாயத்து முடிந்தால் வரும். அப்படி முடியவில்லை என்றால் இன்னும் தள்ளிப்போகும். அதுக்குள் இன்னும் வெவ்வேறு பிரச்சனைகள் எங்கிருந்து எப்படி வரும் என்று தெரியவில்லை.

முதல்வர் வேட்பாளர் போட்டியில் இவர்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறார்களா? இல்லை வேறு யாராவது இருக்கிறார்களா?

நிச்சியமாக மறைமுகமாக வேலுமணி, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கே.பி.முனுசாமி ஒருவரை சிபாரிசு செய்வார். ஏன் நானேகூட கேட்கலாம். நான் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. இவர்கள் எல்லாம் சசிகலா வளர்ப்புதானே என்றார்.

கே.பி.முனுசாமி சொன்னப்படி முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க தலைமை அறிவிக்குமா? கே.சி.பழனிசாமி சொன்னதைப்போல் தற்போதைக்கு பிரச்சனையைத் தள்ளிவைக்க 7 -ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்கிறார்களா? என ர.ர.க்களும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினரும் விவாதித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT