Skip to main content

அதிமுக யாருக்கு சொந்தம்?  எங்கே போயிற்று எம்.ஜி.ஆர். விசுவாசம்? (2)

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

admk

 

அதிமுக டிசைனே அப்படித்தான் என எப்படிச் சொல்லமுடியும்? 


‘புதிதாகக் கட்சி தொடங்க வேண்டும்; முதலமைச்சராக வேண்டும்..’ என்ற எண்ணம் துளியும் இல்லாதவராகவே இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், திமுகவுடன் பிணக்கு ஏற்பட்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவருடைய ரசிகர்கள், தாமரைக் கொடியேற்றி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏற்கனவே ‘அதிமுக’ என்ற பெயரில் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில், தன்னை இணைத்துக்கொண்டார். 1972ல், இப்படித்தான் அதிமுக என்ற கட்சி உருவானது. பிறகுதான், கட்சியின் கொள்கை ‘அண்ணாயிசம்’ என்று சொல்லப்பட்டு, திரைப்படங்களில் சோ போன்றவர்களால் கேலிக்கு ஆளானது. ஆனாலும், ஜெயலலிதாவை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்குவதற்கு எம்.ஜி.ஆரால் முடிந்தது. 


எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சினிமாவில் ஜொலித்தது, பின்னாளில், மக்களின் அபிமானம் பெற்ற அரசியல் தலைவர்கள் ஆவதற்கான தகுதிகளில் பிரதானமாக இருந்தது. சினிமா ஈர்ப்புள்ளவர்களாக இருப்பதாலோ என்னவோ, பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், அந்த நேரத்தில் யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, யாரைப் பிடித்திருக்கிறதோ, அவரது தலைமையை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றனர். கொள்கைப் பிடிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாததால், ‘தலைமை மீதான விசுவாசம்’ என்பதை, சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் செய்கின்றனர். இந்த நடைமுறை, அதிமுகவில் வாடிக்கையாகிப் போனது. 

 

Who owns AIADMK? Where has the MGR loyalty gone?

 


அரசியல்வாதியாக இருந்தாலும், தன்னை நல்லவராகவே வெளிப்படுத்தி வந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், சீனியர்களின் உள்ளார்ந்த எதிர்ப்பை மீறி, 28 படங்களில் தன்னோடு இணைந்து நடித்த ஜெயலலிதாவை,  கொள்கை பரப்புச் செயலாளராக கட்சியில் வலியத் திணித்தார். சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். தன்னை வளர்த்துவிட்டிருந்தாலும், ‘தனிப்பட்ட வாழ்க்கையில் தான் ஏமாற்றப்பட்ட’ மனக்குமுறலிலேயே ஜெயலலிதா இருந்தார். அந்த வன்மத்தை, எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது பகிரங்கமாகவே காட்டினார். அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி மூலம், எம்.ஜி.ஆருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு குடைச்சல் தந்தார். எம்.நடராஜனின் வழிநடத்துதலில், சசிகலா துணையோடு, எம்.ஜி.ஆரிடமிருந்து அதிமுக ஆட்சியைத் தட்டிப்பறிக்கும் வேலைகளிலும் இறங்கினார். ‘இத்தனை துரோகமா?’ என்று வெறுத்துப்போன எம்.ஜி.ஆர்., ‘அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவிடம் பேசக்கூடாது..’ என்று உத்தரவிட்டார். 


பின்னாளில் என்ன நடந்தது? அமரராகி 33 வருடங்கள் கடந்தபின்பும், எம்.ஜி.ஆரை பூஜித்துவரும் ரசிகர்களாகிய தொண்டர்கள்தான், அக்கட்சியின் பலமான அஸ்திவாரம். ஆனாலும், அந்திமக் காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவுக்கு மதிப்பில்லாமல் போனது. எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தங்களின் ஒரே தலைவி ஜெயலலிதாதான் என்று அதிமுகவினர் கொண்டாடினர்.  


‘எம்.ஜி.ஆர்தானே அதிமுக! அதிமுகதானே எம்.ஜி.ஆர்.! எம்.ஜி.ஆர். மீதான விசுவாசம் எங்கே போயிற்று? எம்.ஜி.ஆருக்கே பிடிக்காமல்போன ஜெயலலிதாவை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?’ என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளை அக்கட்சியினரிடம் அடுக்கினால், ‘எங்ககிட்டயேவா?’ என்று திருப்பிக் கேட்பார்கள். ஏனென்றால், அவர்கள் அப்படித்தான்! 

 

Who owns AIADMK? Where has the MGR loyalty gone?


ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும்கூட புரியாத புதிராகவே இருந்துள்ளன. தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, ஒருவிதத்தில் பக்கபலமாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், சேலம் கண்ணன் போன்றோரை அவமதிப்புக்கு உள்ளாக்கி ஓரம்கட்டினார். இக்கட்டான தருணங்களில், தனக்கு பாதுகாப்பாகவும் ஆலோசகராகவும் இருந்து ‘உயர்த்தியவர்’ என்றாலும், வேண்டாதவர் ஆகிவிட்டதால், ம.நடராசனை, போயஸ் கார்டன் பக்கமே தலைகாட்டவிடாமல் விரட்டியடித்தார். அதேநேரத்தில், அவருடைய மனைவி சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக தன்னுடனே வைத்துக்கொண்டார். சசிகலாவும்கூட, இரண்டு தடவை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்தான். 


தலைமையிடமே, இத்தனை குழப்பங்களும், நடவடிக்கைகளில் குளறுபடிகளும் இருக்கும்போது, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ‘ஒரே நிலைப்பாடு’ உள்ளவர்களாக எப்படி இருக்கமுடியும்? 

 

அதிமுக யாருக்குச் சொந்தம்? - முடிவுகட்டும் தேர்தல்! 

 

 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.